சமயபுரம் அருகே டாரஸ் லாரி மோதி கறிக்கடை ஊழியர் பலி

1 day ago 7

சமயபுரம், ஜூன் 4: சமயபுரம் அருகே டாரஸ் லாரி மோதி கறிக்கடை ஊழியர் பரிதாபமாக இறந்தார். சமயபுரம் அருகே உள்ள தெற்கு ஈச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஜான்(38). இவர் சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு இறைச்சி கடையில் கறி வெட்டும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று சமயபுரம் டோல்பிளாசா அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு இறைச்சி விற்பனை செய்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றவர், இறைச்சியை கொடுத்து விட்டு மீண்டும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். மேலும் ஜான் கரியமாணிக்கம் பிரிவு சாலை அருகே வந்தவர், தனது ஊரான தெற்கு ஈச்சம்பட்டிக்கு செல்ல சாலை கடக்க முன்றார்.

அப்போது அதே திசையில் சென்னை காட்பாடியில் இருந்து திருச்சிக்கு சாக்லேட் ஏற்றி வந்த டாரஸ் லாரி எதிர்பாராத விதமாக ஜானின் டூவீலரில் மோதியது. இதில் ஜான் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜானின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் உதவியுடன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்தினால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எல்லப்பா (56) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சமயபுரம் அருகே டாரஸ் லாரி மோதி கறிக்கடை ஊழியர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article