சமயபுரத்தில் கோலாகலம்: மின்னொளி தெப்பத்தில் எழுந்தருளிய அம்மன்

11 hours ago 3

சமயபுரம், பிப்.11: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவு பூத வாகனம், மரஅன்ன வாகனம், மர ரிஷப வாகனம், மரயானை வாகனம், வெள்ளி சேஷ வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 8ம் நாளான நேற்று முன்தினம் இரவு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 9ம் நாள் திருவிழாவான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் உற்சவர் மண்டபத்தில் இருந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்தருள செய்து ஊர்வலமாக தெப்ப மண்டபத்திற்கு வந்தடைந்தார்.

தொடர்ந்து வாண வேடிக்கைகள் முழங்க 8.40 மணிக்கு அம்மன் தெப்பத்தில் எழுந்தருளினார். பின்னர் மூன்று முறை தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நான்குபுறமும் நின்று அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து அம்மன் கடைவீதி, தேரோடும் வீதி வழியாக கோவிலை சென்றடைந்தார். 10-ம் நாளான இன்று (செவ்வாய்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பட்டு ரங்கம் வட திருகாவிரிக்கு வழிநடை உபயம் கண்டருள செல்கின்றார். மாலை அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 10 முதல் 11 மணி வரை ரங்கம் ரெங்கநாதரிடம் இருந்து சீர் பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாளை (புதன்கிழமை) அதிகாலை மகா அபிஷேகமும், தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். காலை முதல் இரவு வரை அம்மன் வழி நடை உபயம் கண்டருளி மண்டகப்படி கண்டருளுகிறார். கோவில் வந்தடைகிறார். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழு தலைவர் இளங்கோவன், இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவல் குழு உறுப்பினர் பிச்சைமணி, சுகந்தி, லட்சுமணன் மற்றும் மணியக்காரர் பழனிவேல் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post சமயபுரத்தில் கோலாகலம்: மின்னொளி தெப்பத்தில் எழுந்தருளிய அம்மன் appeared first on Dinakaran.

Read Entire Article