'சந்திரயான்-5' திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் - இஸ்ரோ தலைவர் தகவல்

3 hours ago 3

சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கான சந்திரயான்-5 திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள வி.நாராயணனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:-

'சந்திரயான்-3' விண்கலம் 25 கிலோ எடையுள்ள 'பிரயாக்யான்' ரோவரை சுமந்து சென்றது. 'சந்திரயான்-5' விண்கலம் நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் வகையில் 250 கிலோ எடையுள்ள ரோவரை சுமந்து செல்லும்.

சந்திரயான் திட்டத்தின் முக்கிய பணி என்பது நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதை அடிப்படையாக கொண்டுள்ளது. 2008-ல் வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திரயான்-1 விண்கலம் நிலவின் வேதியியல், கனிமவியல் வரைபடத்தை எடுத்து அனுப்பியது. 2019-ல் ஏவப்பட்ட சந்திரயான்-2 திட்டம் 98 சதவீதம் வெற்றி பெற்றது. சந்திரயான்-2ல் உள்ள உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா நூற்றுக்கணக்கான படங்களை அனுப்பி வருகின்றன.

சந்திரயான்-3 திட்டம் என்பது சந்திரயான்-2 திட்டத்தின் தொடர்ச்சியான பயணமாகும். 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. 2027-ல் தொடங்கப்படும் சந்திரயான்-4 திட்டம் நிலவில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த சூழலில் மூன்று நாட்களுக்கு முன்பு சந்திரயான்-5 திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தது. ஜப்பானுடன் இணைந்து நாங்கள் அதைச் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article