
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்கா அருகே அமைந்திருக்கும் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட ரிசர்வ் காவல் படை, சத்தீஷ்கார் காவல்துறை, சிறப்பு படைப்பிரிவு வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் இணைந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது மாவோயிஸ்ட் அமைப்பினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களிடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்நிலையில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் மூத்த மாவோயிஸ்ட் தலைவர் கவுதம் என்ற சுதாகர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சில நாட்களுக்கு முன்பு பஸ்தான் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் நம்பலா கேஷவ் என்ற பசவராஜு சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.