சதத்தில் ஜெய்ஸ்வால், கில் சாதனை.. இந்தியா வலுவான தொடக்கம்

5 hours ago 5

லீட்ஸ்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ரோகித் சர்மா ஓய்வு பெற்று விட்டதால் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டனாக அவரது முதல் தொடர் இது என்பதால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இந்த தொடரில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இந்திய அணியில் அறிமுக வீரராக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் இடம் பிடித்தார். 8 ஆண்டுக்கு பிறகு கருண்நாயர் அணிக்கு திரும்பினார். இந்த போட்டியில் 'டாஸ்' ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதையடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். நேர்த்தியாக பேட்டிங் செய்த இவர்கள் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்தனர். ஆப்-ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை பெரும்பாலும் அடிப்பதை தவிர்த்தனர். 24 ஓவர்கள் வரை இந்த ஜோடியை அசைக்க முடியவில்லை. லீட்ஸ் மைதானத்தில் 2012-ம் ஆண்டுக்கு பிறகு முதல் 20 ஓவர்கள் தாக்குப்பிடித்த முதல் வெளிநாட்டு தொடக்க ஜோடி இவர்கள் தான்.

அணிக்கு வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்த இந்த கூட்டணியை மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்பாக வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ் உடைத்தார். ஆப்-ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை லோகேஷ் ராகுல் (42 ரன், 78 பந்து, 8 பவுண்டரி) அடிக்க முயற்சித்த போது பந்து பேட்டின் விளிம்பில் உரசிக்கொண்டு ஸ்லிப்பில் நின்ற ஜோ ரூட்டின் கையில் கேட்ச்சாக தஞ்சமடைந்தது.

2-வது விக்கெட்டுக்கு இறங்கிய புதுமுக வீரர் சாய் சுதர்சன் ஏமாற்றம் அளித்தார். பென் ஸ்டோக்ஸ், லெக் ஸ்டம்புக்கு கொஞ்சம் வெளியே வீசிய பந்தை சாய் சுதர்சன் (0) தட்டிவிட்ட போது அது விக்கெட் கீப்பர் ஜாமி சுமித்திடம் சிக்கியது. முந்தைய பந்தையும் ஸ்டோக்ஸ் இதே போல் தான் லெக்சைடு வாக்கில் போட்டார். அப்போது தப்பிய சுதர்சன், சுதாரித்துக் கொள்ள தவறி விட்டார்.

 

இதைத் தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன், இளம் கேப்டன் சுப்மன் கில் கைகோர்த்தார். வேகமாக ரன் திரட்டுவதில் கவனம் செலுத்திய கில், கிறிஸ் வோக்சின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி சாத்தினார். அவரது இன்னொரு ஓவரில் ஜெய்ஸ்வாலும் தனது பங்குக்கு 3 பவுண்டரி தெறிக்க விட்டார். கில் 56 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். டெஸ்டில் அவரது அதிவேக அரைசதம் இதுவாகும்.

இன்னொரு பக்கம் இங்கிலாந்து பவுலர்களுக்கு 'தண்ணி' காட்டிய ஜெய்ஸ்வால் 144 பந்துகளில் தனது 5-வது சதத்தை பூர்த்தி செய்து அமர்க்களப்படுத்தினார். ஆனால் சதம் அடித்த சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வால் (101 ரன், 159 பந்து, 16 பவுண்டரி, ஒரு சிக்சர்), பென் ஸ்டோக்சின் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஜெய்ஸ்வால்- கில் இணை 3-வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தது கவனிக்கத்தக்கது.

 

இதன் பின்னர் கில்லுடன், துணை கேப்டன் ரிஷப் பண்ட் இணைந்து, அணியின் ஸ்கோருக்கு மேலும் வலுவூட்டினர். இந்த ஜோடியில் அபாரமாக பேட்டிங் செய்த கேப்டன் சுப்மன் கில் பவுண்டரியுடன் 6-வது சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் கேப்டனாக அறிமுகம் ஆன இன்னிங்சிலேயே சதம் அடித்த 5-வது இந்தியர் என்ற சிறப்பை கில் பெற்றார். ரிஷப் பண்ட் அரைசதத்தை தாண்டினார்.

 

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 85 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து மண்ணில் முதல் நாளில் இந்திய அணி 350 ரன்னுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் முறையாகும். கேப்டன் சுப்மன் கில் 127 ரன்களுடனும் (175 பந்து, 16 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரிஷப் பண்ட் 65 ரன்களுடனும் ( 102 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் உள்ளனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

 

சதத்தில் ஜெய்ஸ்வால், கில் சாதனை

* இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தனது முதலாவது டெஸ்டிலேயே சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனைக்கும் ஜெய்ஸ்வால் சொந்தக்காரர் ஆனார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் 161 ரன்கள் எடுத்திருந்தார்.

* டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அறிமுகம் ஆன இன்னிங்சிலேயே சதம் நொறுக்கிய 5-வது இந்தியர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார். இதற்கு முன்பு விஜய் ஹசாரே (164 ரன், இங்கிலாந்துக்கு எதிராக, 1951-ம் ஆண்டு), சுனில் கவாஸ்கர் (116 ரன், நியூசிலாந்துக்கு எதிராக, 1976), வெங்சர்க்கார் (102 ரன், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 1987) விராட் கோலி (115 ரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2014) ஆகியோர் தங்களது கேப்டன்ஷிப்பின் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்திருக்கிறார்கள். ஆனால் இச்சாதனையை குறைந்த வயதில் நிகழ்த்திய இந்திய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் அறியப்படுகிறார்.

 

* லீட்ஸ் டெஸ்டில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் சதம் அடித்து பிரமாதப்படுத்தி உள்ளனர். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இந்திய வீரர்கள் முதல் நாளில் சதம் காண்பது இது 3-வது முறையாகும். ஏற்கனவே தெண்டுல்கர்- ஷேவாக் (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2001), ஷிகர் தவான்- புஜாரா (இலங்கைக்கு எதிராக, 2017) ஆகியோர் இவ்வாறு சதம் கண்டுள்ளனர்.

* லீட்ஸ் மைதானத்தில் விஜய் மஞ்ச்ரேக்கர், பட்டோடி, வெங்சர்க்கார், டிராவிட், கங்குலி, சச்சின் தெண்டுல்கர் ஆகியோருக்கு பிறகு சதம் அடித்த இந்திய வீரர்களாக சாதனை பட்டியலில் ஜெய்ஸ்வால், சுப்மல் கில் இணைந்துள்ளனர். அதேசமயம் லீட்சில் சதம் விளாசிய முதல் இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

* ரிஷப் பண்ட் 52 ரன் எடுத்த போது டெஸ்டில் 3 ஆயிரம் ரன்களை (76 இன்னிங்ஸ்) கடந்தார். இந்த மைல்கல்லை குறைந்த இன்னிங்சில் எட்டிய 2-வது விக்கெட் கீப்பர் (முதலில் கில்கிறிஸ்ட் 63 இன்னிங்ஸ்) ஆவார்.

Read Entire Article