ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 17 கிராமங்களுக்கு முதல் முறையாக மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது. சட்டீஸ்கரில் உள்ள மான்பூர்-மொஹ்லா-அம்பாகார் மாவட்டம் மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி எல்லையில் உள்ளது. இது மலைபாங்கான மாவட்டம் ஆகும். மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளுக்கு செல்வது கடினமாகும். நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் காரணமாக மின்சார இணைப்பு கொடுப்பது என்பது இயலாத காரியம். இதனால் மலை கிராமங்களில் சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.
ஆனால், சோலார் தகடுகள் திருடப்படுவதும், பராமரிப்பதிலும் பிரச்னைகள் இருந்து வந்தன. இந்த நிலையில்,சட்டீஸ்கர் மாநில முதலமைச்சர் மின்சார வசதி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியில் தொலைதூர மலை கிராமங்களுக்கு மின் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டுல்ஜோரா,கட்டாபார்,போத்ரா,பக்மார்க்கா, சம்பல்பூர் உள்ளிட்ட 17 கிராமங்களுக்கு முதல்முறையாக மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் மொத்தம் உள்ள 540 வீடுகளில் 275 வீடுகளுக்கு மின் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீதியுள்ள வீடுகளுக்கு மின்சார இணைப்பு கொடுக்கும் பணி நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் பாதிப்பு கிராமங்களுக்கு முதல்முறையாக மின்சார வசதி appeared first on Dinakaran.