சட்டத்தின் துணையோடு வழக்கை எதிர்கொள்வேன்: சேவூர் ராமச்சந்திரன்

1 month ago 7

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருப்பவர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன். இவர், கடந்த 2016 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தார்.

அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் கடந்த 23.5.2016 முதல் 31.3.2021 வரையிலான கால கட்டத்தில் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.8 கோடியே 3 லட்சத்து 53 ஆயிரத்து 487 சேர்த்துள்ளது தெரியவந்தது. இது வருமானத்தைவிட 125 சதவீதம் அதிகமாகும். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அவரது மனைவி மணிமேகலை, மகன்கள் சந்தோஷ்குமார், விஜயகுமார் ஆகியோர் மீது திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், ஆரணியில் உள்ள சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வீட்டில் ஆய்வாளர் அருள்பிரசாத் தலைமையிலும், அருகில் உள்ள அவரது மகன் சந்தோஷ்குமார் வீட்டில் ஆய்வாளர் மைதிலி தலைமையில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். காலை 6.30 மணிக்கு தொடங்கிய தற்போது நிறைவு பெற்றுள்ளது. சுமார் 15 மணி நேரம் நடந்த சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சோதனை நிறைவுக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் சேவூர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி துணையோடும், சட்டத்தின் துணையோடும் இந்த வழக்கை எதிர்கொள்வேன். பொய்யான வழக்கிலிருந்து மீண்டு வருவேன். லஞ்ச ஒழிப்புத்துறை எந்த பொருளையும் பறிமுதல் செய்யவில்லை; சொத்து ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article