ஜான்சி: சகோதரி, அவரது காதலனுடன் சேர்ந்து சதி வேலைகளை செய்து சொத்துக்காக மாமியாரை விஷ ஊசி போட்டுக் கொன்ற மருமகளை போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சியில் கடந்த ஜூன் 24ம் தேதி, சுசீலாதேவி (60) என்பவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வீட்டிலிருந்த நகைகள் காணாமல் போயிருந்ததால், இது ஒரு கொள்ளைச் சம்பவம் என உறவினர்கள் கருதி, அவரது உடலை உடனடியாகத் தகனம் செய்தனர். இவ்விவகாரம் குறித்து போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.
ஆனால், மாமியாரின் இறப்பிற்குப் பிந்தைய இறுதிச் சடங்குகளில் மருமகள் பூஜா ஜாதவ் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். அதனால், காவல்துறைக்கு அவர் மீது பெரும் சந்தேகத்தை ஏற்பட்டது. இந்த சந்தேகத்தின் பேரில் பூஜாவை விசாரித்தபோது, கொடூரமான சதித்திட்டம் அம்பலமானது. இறந்துபோன தனது கணவரின் பெயரில் இருக்கும் 18 சென்ட் நிலத்தை விற்றுவிட்டு, குவாலியரில் குடியேற பூஜா திட்டமிட்டுள்ளார். இதற்குத் தடையாக இருந்த மாமியார் சுசீலாதேவியைக் கொல்ல, தனது சகோதரி கமலா மற்றும் அவரது காதலன் அனில் வர்மாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.
அவர்கள் வகுத்த சதித் திட்டப்படி, 125 கி.மீ பயணம் செய்து ஜான்சிக்கு வந்த கமலாவும் அனிலும், பூஜாவின் உதவியுடன் சுசீலாதேவிக்கு விஷ ஊசி போட்டுக் கொன்றுள்ளனர். மேலும், இது ஒரு கொள்ளைச் சம்பவம் போலத் தெரிய வேண்டும் என்பதற்காக, சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர். தற்போது பூஜா மற்றும் கமலாவைக் கைது செய்துள்ள காவல்துறை, தப்பியோட முயன்ற அனில் வர்மாவை காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சகோதரி, அவரது காதலனுடன் சதி வேலைகளை செய்து சொத்துக்காக மாமியாரை விஷ ஊசி போட்டுக் கொன்ற மருமகள்: இறுதிச் சடங்கில் பங்கேற்காததால் சிக்கினார் appeared first on Dinakaran.