கோவையில் பரபரப்பு நாயை ஏவி சிறுமியை கடிக்க விட்ட பெண் கைது

15 hours ago 3

*மகன்கள் மீது வழக்கு

கோவை : கோவையில் நாயை ஏவி சிறுமியை கடிக்கவிட்ட பெண் கைது செய்யப்பட்டார்.கோவை புலியகுளம் அம்மன்குளத்தை சேர்ந்தவர் பொன்வேல் (33). இவருக்கு 5 வயதில் மேகாலினி என்ற மகளும், 7 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டில் சவுமியா (50) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அவர் தனது வீட்டில் 5 நாய்களை வளர்த்து வருகிறார். இந்த நாய்கள் கடந்த 2023ம் ஆண்டு பல பேரை கடித்து குதறியது. இதனையடுத்து அப்பகுதி வாசிகள் சவுமியாவிடம் நாயை வளர்க்க வேண்டாம் என கேட்டு கொண்டனர். இருப்பினும் சவுமியா தனது வீட்டில் தொடர்ந்து நாய்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி சிறுமி மேகாலினி தனது வீட்டருகே விளையாடி கொண்டிருந்தார். இதனை பார்த்த சவுமியா சிறுமியை வேறு பக்கம் சென்று விளையாடுமாறு தெரிவித்துள்ளார்.

ஆனால் சிறுமி தொடர்ந்து அங்கேயே விளையாடியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சவுமியா நாயை ஏவி சிறுமியை கடிக்க விட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நாயை விரட்டிவிட்டனர். பின்னர் நாய் கடியில் காயமடைந்த சிறுமியை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து பொன்வேல் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுமியாவை கைது செய்தனர். மேலும் அவரது மகன்கள் சூர்யா (23), சாந்தாராம் பிரகாஷ் (21) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட சவுமியாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கோவையில் பரபரப்பு நாயை ஏவி சிறுமியை கடிக்க விட்ட பெண் கைது appeared first on Dinakaran.

Read Entire Article