கோவை: கோவை மேயர் பங்களாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாநகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார். கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆண் ஒருவர் ‘மாநகராட்சி மேயர் பங்களாவில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த குண்டு சிறிது நேரத்தில் வெடித்து சிதறும்’ என தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்தார். இதனால், உஷாரான போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆர்.எஸ்.புரம் பகுதியில் மேயர் பங்களாவுக்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இதனையடுத்து மிரட்டல் வந்த செல்போன் நம்பர் குறித்து விசாரித்தனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கோவை கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி தக்காளி மார்க்கெட்டை சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஆனந்த் (40) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில், ஆனந்தின் மனைவி குடும்ப தகராறில் அண்மையில் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆனந்த் அழைத்தும் திரும்ப வர மறுத்துவிட்டார். இதுபற்றி ஆனந்த் ஆன்லைன் மூலம் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஆனந்த் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
The post கோவை மேயர் பங்களாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாநகராட்சி ஊழியர் கைது appeared first on Dinakaran.