கோவை, சென்னையில் எடப்பாடி பங்கேற்ற விழாவை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணிப்பு: அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டம்

4 months ago 8


சென்னை: கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்காமல் அதேபகுதியை சேர்ந்த மூத்த நிர்வாகி கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்தார். இதுகுறித்து, விளக்கம் அளித்த செங்கோட்டையன், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என புதிய விளக்கம் அளித்தார். அதேபோன்று நேற்று சென்னையில் நடந்த விழாவையும் அவர் புறக்கணித்தார். இதன்மூலம் அதிமுக உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. கோவை மாவட்டம், அன்னூரில் நேற்று முன்தினம் நடந்த அவினாசி-அத்திக்கடவு திட்ட குழு சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவை முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்தார். இது அதிமுக தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம் அதிமுக கோஷ்டி பூசல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று கோவையில் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: அத்திக்கடவு-அவினாசி திட்ட பாராட்டு விழா ஏற்பாடு செய்திருக்கிற குழுவினர் 3 நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தனர். அப்போது விழா மேடை பேனரில் எங்களை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் இல்லை. எங்களிடத்தில் கலந்து இருந்தால் நான் அதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பேன். பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த இந்த தட்டிகளை பார்த்தபோது தான் எனது கவனத்திற்கு வந்தது. என்னை வளர்த்து ஆளாக்கிய தலைவர்கள் உருவப்படங்கள் இல்லை. அதே நேரத்தில் இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு 2011ல் ஜெயலலிதா ₹3.72 கோடி நிதி வழங்கினார். அப்போது பொது பணித்துறை அமைச்சராக இருந்த ராமலிங்கம், அதை ஆய்வு செய்ய உத்தரவு வழங்கினார்.

இந்த பணிகளை துவங்கியதற்கு அவர்கள் அடித்தளமாக இருந்திருக்கிறார்கள். ஆகவே அவர்களது படங்களும் இல்லை என்று அவர்களிடம் கூறினேன். நான் விழாவை புறக்கணிக்கவில்லை. அங்கு செல்ல வில்லையே தவிர, அத்திக்கடவு -அவினாசி திட்ட கூட்டு குழுவின் கவனத்திற்கு சொல்லி இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி எம்.பி.ரோடு இன்ஸ்டிடியூஷனல் ஏரியால் ₹10 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதேநேரம், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்தார். அவர் கட்சி தலைமை அலுவலகம் வரவில்லை. தொடர்ந்து 2வது நாளாக அதிமுக கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளை கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்து வருவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கட்சி தொண்டர்களும் அதிமுக கட்சிக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். கடந்த மக்களவை தேர்தலின்போது திருப்பூர் தொகுதியின் வேட்பாளராக தன்னுடைய உறவினரை எட்பாடி பழனிசாமி வேட்பாளராக அறிவித்தார். வேட்பாளர் அறிவிக்கும்ேபாது கூட யார் வேட்பாளர் என்பது செங்கோட்டையனுக்கு தெரியவில்லை. இதனால் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் சேர்ந்து விட்டார். இதனால் வேட்பாளர் மருத்துவமனை சென்றுதான் ஆசிர்வாதம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதேபோல, ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையன் மாவட்ட செயலாளராக உள்ள பகுதியில் பன்னாரி தொகுதி எம்எல்ஏவை பொறுப்பாளராக போடக் கூடாது என்று செங்கோட்டையன் கூறினார். ஆனால் அவரை பொறுப்பாளராக அறிவித்தார். இதனால் ஆரம்பம் முதலே எடப்பாடி பழனிசாமியுடன் செங்கோட்டையன் மோதலில் ஈடுபட்டு வந்தார். தற்போது எடப்பாடி – ெசங்கோட்டையன் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதால் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கோவை, சென்னையில் எடப்பாடி பங்கேற்ற விழாவை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணிப்பு: அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article