கோவில்பட்டியில் நள்ளிரவில் பயங்கரம் வாலிபர்-பெண் அடுத்தடுத்து கொலை: 8 பேர் அதிரடி கைது; பதற்றத்தால் போலீஸ் குவிப்பு

1 day ago 5

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகர் 1வது தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மகன் பிரகதீஸ்வரன் (20). கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவரது நண்பர் திருமணம், கோவில்பட்டி வள்ளுவர் நகரில் உள்ள மண்டபத்தில் நடந்தது. இதற்காக பிரகதீஸ்வரன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து பிளக்ஸ்போர்டு வைத்திருந்தனர். இந்த பிளக்ஸ்போர்டை யாரோ கிழித்து சேதப்படுத்தி இருந்தனர். அங்குள்ள செண்பகா நகர் 3வது தெருவை சேர்ந்த கார் டிரைவர் சதீஷ் மாதவன் (25) என்பவர் தான் இதை செய்திருக்க வேண்டும் என பிரகதீஸ்வரன் கருதினார். அவரிடம் சென்று தகராறு செய்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் பிரகதீஸ்வரனை தீர்த்துக்கட்ட சதீஷ் மாதவன், நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு அவரை கண்காணித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி – கடலையூர் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகே பிரகதீஸ்வரன் பைக்கில் வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த சதீஷ் மாதவன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதில் சம்பவ இடத்திலேயே பிரகதீஸ்வரன் இறந்தார். இதையறிந்த அவரது நண்பர்கள் சதீஷ் மாதவனை தேடி அவரது வீட்டிற்கு சென்றனர்.

ஆனால் அங்கு அவர் இல்லை. அவரது தாய் கஸ்தூரி (48) மற்றும் உறவினர் செண்பகராஜ் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் சதீஷ் மாதவன் எங்கே? என்று கேட்டு இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதில் கஸ்தூரி உயிரிழந்தார். செண்பகராஜ் படுகாயமடைந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிந்து சதீஷ் மாதவன், செல்லத்துரை, சுரேஷ், மதன்குமார், கனகராஜ், அர்ஜூன், வேலு (எ) முனியசாமி(19) உள்பட 8 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் நிருபர்களிடம் கூறுகையில், கோவில்பட்டியில் நடந்த கொலை சம்பவங்கள், இருதரப்பு நண்பர்களுக்கு இடையே சிறு பிரச்னைகளால் நடந்துள்ளது. இது சாதி ரீதியான கொலையோ, முன்விரோதமான கொலையோ கிடையாது என்று தெரிவித்தார். அடுத்தடுத்து நடந்த இந்த இரு கொலை சம்பவங்களால் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

* சொத்து பிரச்னையில் மூதாட்டியை கொன்ற முதியவர்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அம்பலச்சேரியை சேர்ந்தவர் தேவசுந்தரம் மனைவி சுயம்புகனி (62). கணவர் இறந்துவிட்டார். இவரது 2 மகன்களும் திருமணமாகி குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகின்றனர். ஊரில் தனியாக வசித்த சுயம்புகனிக்கும், தேவசுந்தரம் சகோதரர் தங்கப்பாண்டியன் (70) குடும்பத்திற்கும் சொத்து பிரச்னை ஏற்பட்டு பேசி தீர்வு காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.45 மணியளவில் சுயம்புகனி வீட்டிற்கு போதையில் வந்த தங்கப்பாண்டியன், சொத்து பிரச்னை தொடர்பாக தகராறில் ஈடுபட்டு அவரை கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் சுயம்புகனி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிந்து தங்கப்பாண்டியனை கைது செய்தனர்.

The post கோவில்பட்டியில் நள்ளிரவில் பயங்கரம் வாலிபர்-பெண் அடுத்தடுத்து கொலை: 8 பேர் அதிரடி கைது; பதற்றத்தால் போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article