
கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது தொடர்பாக, கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த தவறிய, அரசு தலைமை செயலர்களுக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
கோவை, சேலம் அரசு போக்குவரத்துக் கழகங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழக அரசு குடிநீர் வடிகால் வாரியம் போன்றவற்றில் பணிபுரிந்து இறந்தவர்களின் வாரிசுகளான நித்யா, கார்த்திகேயன், அஜித்குமார் மற்றும் அன்பரசன் ஆகியோர், தங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக்கோரி அளித்த மனுக்களை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி, சென்னை ஐகோர்ட்டில், 2020-ல் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, 'பணியாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்கவும், அதற்கு ஏற்ப சட்ட விதிகளில் திருத்தம் செய்யவும், ஒரு குழு அமைக்க வேண்டும். குழுவிடம் இருந்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை பெற்று, எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக அரசின் தலைமை செயலருக்கு 2023 செப்டம்பர் 19-ல் உத்தரவிட்டிருந்தது.
கோர்ட்டு உத்தரவுப்படி, குறிப்பிட்ட காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, இந்த நான்கு பேர் தொடர்ந்த வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிடும்படி, ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு, நீதிபதி பட்டு தேவானந்த் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இந்த வழக்குகள் நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக, தலைமை செயலர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
இந்த கோர்ட்டு, 2023 செப்டம்பர் 19-ல் பிறப்பித்த உத்தரவின்படி, இந்தப் பிரச்சினையை சரியான கண்ணோட்டத்தில் ஆராய, ஒரு குழு அமைக்கவில்லை என்பது தெரிய வருகிறது. இதைப் பார்க்கும்போது, கோர்ட்டு உத்தரவை, தலைமை செயலர் பின்பற்றத் தவறி விட்டார் என்பதற்கான முகாந்திரம் உள்ளது.
கோர்ட்டு உத்தரவை அவமதித்த, தலைமை செயலரின் அணுகுமுறை வேதனை அளிக்கிறது. தற்போதைய பிரச்சினை, பல அதிகாரிகளின் சோம்பல் மனப்பான்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. மாநில நிர்வாகத்தின் தலைமை பொறுப்பில் உள்ள தலைமைச் செயலரே, நீதிமன்ற உத்தரவுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும்போது, அவருக்கு கீழுள்ள அதிகாரிகள், அதை அமல்படுத்துவர் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும்? நீதிக்காக கோர்ட்டை அணுகும் சாமானியர்கள் மற்றும் ஏழை மக்கள் மீது, அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
கோர்ட்டு உத்தரவுகளை பிறப்பித்த பின்னும், நீதியின் பலனை அனுபவிக்க முடியாத நிலையில், வழக்கு தொடுத்தவர்கள் உள்ளனர் என்பது தெரிகிறது. எனவே, இந்த வழக்கில் தலைமை செயலருக்கு எதிராக, தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதியப்படுகிறது. இது, கோர்ட்டு உத்தரவுகளை அமல்படுத்தாமல், துணிச்சலுடன் செயல்படும் அதிகாரிகளுக்கான செய்தியாக இருக்கும்.
எனவே, 2023 செப்டம்பர் 19 முதல் இன்றுவரை தலைமை செயலராக பணிபுரிந்த அனைத்து அதிகாரிகளின் விபரங்களையும் பெற்று, அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்ட விதிகளின்கீழ் அவமதிப்பு வழக்கை, ஐகோர்ட்டு பதிவாளர் பதிவு செய்ய வேண்டும். அடுத்த விசாரணையின்போது, அவர்கள் இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்குக்கு பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.