சென்னை: சென்னை நூங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் கோயில் பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் கருணைக் கொடையாக வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 16 பேருக்கு ரூ.1,000க்கான காசோலைகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகளும், சீருடைகளும் வழங்கப்பட்டு வருகிறது. கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைத் தொகை ரூ.3000, ஓய்வூதியம் ரூ.4,000, குடும்ப ஓய்வூதியம் ரூ.2,000, கிராமக் கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ரூ.4,000 உயர்த்தி வழங்கிய அரசு திராவிட மாடல் அரசாகும். மேலும், 2,516 ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக் கொடையாக கடந்தாண்டு முதல் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
கோயில் பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1,000 பொங்கல் கருணைக் கொடையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் பணியாளர் சேமநலநிதி திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் 969 பேர் தங்களுக்கும் பொங்கல் கருணைக் கொடை வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
கோட்டூர்புரம், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சொந்தமாக கோட்டூர்புரம் பகுதியில் ஒரு திருமண மண்டபம் அமைந்துள்ளது. அதனருகில் மீதமுள்ள 31 சென்ட் இடத்தில் 1994ம் ஆண்டிலிருந்து 16 பேர் குடியிருந்து வருகின்றனர். 2003ம் ஆண்டிலிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட துறை ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதில் ஒரு குடியிருப்பு அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் தந்தை தாமோதரன் பெயரில் கோயில் இடம் 325 சதுரடி, மாநகராட்சி இடம் 328 சதுரடி என மொத்தம் 653 சதுரடி உள்ளது. இதுவரை சுமார் ரூ.7,126 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சட்டப்படி கோட்டூர்புரம் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள 16 குடியிருப்புகளையும் நியாய வாடகையின்படி வாடகைதாரர்களாக ஏற்பதா அல்லது ஆக்கிரமிப்பிலிருந்து அவர்களை வெளியேற்றுவதா என்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு நடந்து வருகிறது. இவ்வாறு கூறினார்.நிகழ்ச்சியில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சுகுமார், தனி அலுவலர் ஜானகி, இணை ஆணையர்கள்ஜெயராமன், லட்சுமணன், வான்மதி,கவெனிதா, உதவி ஆணையர் பாரதிராஜா பங்கேற்றனர்.
The post கோயில் பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1,000: அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார் appeared first on Dinakaran.