மதுரை: தமிழகத்தில் ஐந்து கோவில்களுக்கு கோவில் நிதி மூலம் திருமண மண்டபம் கட்ட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதனை எதிர்த்து மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல வழக்கு தக்கல் செய்தார்
அந்த மனுவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உப கோவிலான வாகீஸ்வரர் கோவில், திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு சொந்தமான இடங்களில், 22 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் திருமண மண்டபங்கள் அமைக்க தமிழக அறநிலையத்துறை 2023 மார்ச் 3ல் அரசாணை வெளியிட்டது. இப்பணியை அந்தந்த கோவில் நிதி மூலம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை சட்டப்படி கோவில் நிதியை நலிவடைந்த கோவில்களில் அறப்பணி மேற்கொள்ள பயன்படுத்தலாம், இந்து மதத்தை பரப்ப மற்றும் கல்வி நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், மருத்துவமனைகள் துவக்க கோவில் நிதியை பயன்படுத்தலாம். ஆனால் இதற்கு முரணாக திருமண மண்டபம் அமைக்க பயன்படுத்துவது விதிமீறலாகும் எனவே அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
The post கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை appeared first on Dinakaran.