கோத்தகிரி அருகே மீண்டும் மீண்டும் உலா வரும் சிறுத்தை

6 months ago 18

 

கோத்தகிரி, நவ.12: கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு பகுதியில் மீண்டும் மீண்டும் உலா வரும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

அவ்வாறு வனப்பகுதியில் இருந்து வெளியேறி நகர் பகுதியில் உலா வரும் சிறுத்தை குடியிருப்பு பகுதிகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு பகுதியில் தாவிது பாக்கியராஜ் என்பவரது குடியிருப்பில் ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்பு குடியிருப்பு வளாகத்தில் சிறுத்தை புகுந்து வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்றது.

இந்நிலையில், நேற்று அதிகாலை மீண்டும் அதே பகுதியில் சிறுத்தை உலா வந்துள்ளது. இந்த காட்சி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், குடியிருப்பு வாசிகளை பெரிதும் அச்சமடைய செய்துள்ளது. எனவே வனத்துறையினர் கன்னேரிமுக்கு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் இடத்தை உறுதி செய்து அப்பகுதியில் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோத்தகிரி அருகே மீண்டும் மீண்டும் உலா வரும் சிறுத்தை appeared first on Dinakaran.

Read Entire Article