சென்னை: சென்னை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில், அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஆய்வுக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: கோடைகாலத்தில் கடந்த ஆண்டு 20,830 மெகாவாட் மின் தேவை இருந்தது. இந்த ஆண்டு 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் மின் விநியோகத்திற்கு மின்சார வாரியம் தயாராக உள்ளது. ஸ்மார்ட் மீட்டர் தொடங்குவதற்கான ஏலம் விடப்பட்டது, அந்த ஏலத்தில் மின்சார வாரியம் எதிர்பார்த்த அளவிற்கான விலை புள்ளிகள் கிடைக்கவில்லை, இதன் காரணமாக ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் புதிய ஏலம் விடப்படும்.
10, 15 வருடங்கள் பணிபுரியும் பணியாளர்களுக்கு நிரந்தர பணிகள் வழங்கப்படவில்லை என பல்வேறு நபர்கள் கேள்வி எழுப்பு வருகின்றனர், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக வரும் பணியாளர்களுக்கு மின்வாரியம் நிரந்தர பணி வழங்க முடியாது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மிக முக்கிய தேவையாக எந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என நிதி துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைத்தவுடன் மின்சார வாரியத்தில் பணியிடங்கள் நிரப்பப்படும். தமிழகத்தில் சோலார் மின் தயாரிப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார், நீரேற்று மின் நிலையங்கள் பொருத்தவரை 14, 500 மெகாவாட் கண்டறியப்பட்டுள்ளது அதற்கான ஏலம் மிக விரைவாக தொடங்கப்படும். மாதாந்திர மின்கணக்கீடு கண்டிப்பாக நடைபெறும். விரைவாக ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு மாதாந்திர மின்கணக்கீடு செயலுக்கு வரும்.
The post கோடைகால மின் தேவை 22 ஆயிரம் மெகாவாட் எட்டும்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் appeared first on Dinakaran.