கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு: 40 லட்சம் மாணவ, மாணவியர் வருகை, முதல் நாளிலேயே சீருடை, புத்தகம்

1 day ago 4

சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு வழக்கம் போல இன்று பள்ளிகல் தொடங்குகின்றன. 32 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் சுமார் 40 லட்சம் மாணவ மாணவியர் பள்ளிக்கு திரும்புகின்றனர். பள்ளி தொடங்கும் முதல்நாளான இன்றே, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ மாணவியருக்கு சீருடைகள், பாடப்புத்தகங்கள் நோட்டுகள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில் இயங்கும் 32 ஆயிரம் அரசு மற்றும் அரசுப் பள்ளிகளில் படித்த 40 லட்சம் மாணவ மாணவியர் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் நடந்த ஆண்டுத்தேர்வுக்கு பிறகு கோடை விடுமுறையில் சென்றனர்.

இதையடுத்து, இவர்கள் மீண்டும் ஜூன் 2ம் தேதி பள்ளிக்கு திரும்ப வேண்டும் என்று ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இருப்பினும், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கின்ற மாணவ மாணவியர் பள்ளிக்கு திரும்பும் நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் அது குறித்து அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவினர் பரிந்துரைக்கு ஏற்ப பள்ளிகள் திறப்பது தள்ளிப்போகுமா அல்லது திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேசும் போது தெரிவித்தார்.

ஆனால் தமிழகத்தில் தற்போது நிலவும் வானிலை அமைப்பின்படி கோடை வெயில் குறைந்து வெப்பம் தணிகின்ற அளவுக்கு கோடை மழை பெய்து வருவதால் வட மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பது 100 சதவீதம் உறுதியாகியுள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் மழை நீடித்து வருவதால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்க உள்ளனர். இருப்பினும் ஏற்கெனவே அறிவித்தபடி அனைத்து பள்ளிகளும் இன்று திறப்பதற்கு ஏற்ப பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக அனைத்து பள்ளி வளாகங்களும், அவற்றில் உள்ள வகுப்பறைகள் தூய்மை செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பள்ளி வளாகங்களில் கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர பள்ளிகள் திறக்கும் நாளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ மாணவியருக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், உள்ளிட்ட விைலயில்லா பொருட்கள் வழங்கவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இன்று பள்ளிகள் திறந்ததும் இவை மாணவ மாணவியருக்கு வழங்கப்படும். இது தவிர, பள்ளிகளில் படித்து இடைநின்ற மாணவியர்களின் விவரங்கள் திரட்டப்பட்டு அவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு திரும்ப அழைத்து வரும் வகையில், உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், மாணவர் சேர்க்கை அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி திறந்த முதல் நாள் அன்றே நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளதால் முறைப்படி மாணவர்கள் சேர்க்கை இன்று தொடங்க உள்ளது.

குறிப்பாக தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை முழுமையாக உள்ளதா என்பதும் உறுதி செய்யப்படும். பள்ளிகள் அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் பள்ளி செல்லும் வயதுடைய அனைத்துக் குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்ப்பதை உறுதி செய்யப்பட உள்ளது. அதேபோல 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் இடையில் பள்ளியை விட்டு நின்றுவிடாத வகையில், அவர்கள் 9ம் வகுப்பில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் காலை உணவு, குறித்த நேரத்தில் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் அனைத்து பள்ளிகளும் முறையான பணிப்பகிர்வுடன் கூடிய வகுப்புக்குரிய மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய காலை அட்டவணையை தயார் செய்து பள்ளி திறக்கும் முதல் நாளில் இருந்தே செயல்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 32 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த சுமார் 40 லட்சம் மாணவ மாணவியர் இன்று பள்ளிக்கு திரும்புவதால் அவர்களை வரவேற்கவும் சில பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் புதிய மாணவ மாணவிரை வரவேற்கவும் மலர் கொத்து கொடுத்து மகிழ்விக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளபடி காலை 9 மணி முதல் 9.30 மணி வரை இறை வணக்கம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

The post கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு: 40 லட்சம் மாணவ, மாணவியர் வருகை, முதல் நாளிலேயே சீருடை, புத்தகம் appeared first on Dinakaran.

Read Entire Article