கோடியில் கொட்டி செலவு சாலையோரங்களில் முளைத்த கடைகளால் போக்குவரத்து இடையூறு

2 hours ago 1

*சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்

ஈரோடு : சாலையை அகலப்படுத்தியும் பயனில்லாத வகையில், சாலையோரங்களில் முளைக்கும் கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் போக்குவரத்து இடையூறுகளால சிக்கித் தவித்து வருகின்றனர்.போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு ஈரோடு சத்தி செல்லும் இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற ரூ. 376 திட்ட மதிப்பீட்டில் கடந்த 2018ல் பணிகள் தொடங்கப்பட்டன.

இதில், ஈரோடு பேருந்து நிலையத்தின் அருகில் தொடங்கி சித்தோடு வரை சுமார் 9 கி.மீ. தூரத்துக்கு சாலையின் இருபுறமும் அகலப்படுத்தப்பட்ன.தொடர்ந்து சாலையின் இருபுறமும் பாதசாரிகள் பிரதான சாலைக்கு வராமல் தடுக்கவும், விபத்துகள், கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும் நடைபாதைகளில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

மேலும், சாலை நடுவில் கான்கிரீட் தடுப்புச் சுவர்கள், சாலையை கடக்க இரும்பாலான மேம்பாலம் அமைத்தல் என ரூ. 104.70 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலையாக மாற்றி, விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அதேபோல, கடந்த 2012ல் சித்தோட்டில் இருந்து கோபி வரையிலும் ரூ. 272 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், முதல் கட்டமாக தொடங்கப்பட்ட ஈரோடு சித்தோடு வரையிலான 9 கி.மீ. தூரத்துக்கு இருபுறமும் சாலை அகலப்படுத்தப்பட்டு, நடைபாதை, தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில், கனிராவுத்தர்குளம் பகுதியில் பெரிய சேமூர் அக்ரஹாரம் சாலை 4 முனைப் பிரிவில் சாலையில் இருபுறமும் சாலையோரக் கடைகள் ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மேலும், நடைபாதைகளில், சாலையோரம் இடைவெளியின்றி நிரம்பி வழியும் கடைகளால் கனிராவுத்தர் குளம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால் பல கோடி ரூபாய்கள் செலவு செய்து சாலையை அகலப்படுத்தியும் எவ்வித பயனுமின்றி போக்குவரத்து நெரிசலும், இடையூறும் ஏற்பட்டே வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கனிராவுத்தர் குளம் மட்டுமின்றி, சூளை, சிக்கய்ய அரசு கலைக்கல்லூரி பகுதி என ஈரோடு பஸ் நிலையம் அருகில் சத்தி ரோடு தொடங்கி பல்வேறு பகுதிகளிலும், சாலையோர கடைகளால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகிறனர்.சமீபத்தில் ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்துப் பகுதிகளை கண்டறிந்து விபத்துகளைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்தும் போக்குவரத்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

எனவே, ஈரோடு சத்தி சாலையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் பகுதிகள் மற்றும் அதற்கான காரணங்களை ஆய்வு செய்து, இடையூறுகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.விபத்து அபாயங்களைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோடியில் கொட்டி செலவு சாலையோரங்களில் முளைத்த கடைகளால் போக்குவரத்து இடையூறு appeared first on Dinakaran.

Read Entire Article