
வாஷிங்டன்,
அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசில் அரசாங்க திறனுக்கான துறை (டி.ஓ.ஜி.இ.) ஒன்று உருவாக்கப்பட்டது. வரி செலுத்தும் மக்களின் பணம் பாதுகாக்கப்படவும், அமெரிக்காவின் கடனை குறைக்கவும், அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோக தடுப்புக்காகவும், அரசில் வீணடிப்பு மற்றும் மோசடி ஆகியவற்றை தடுக்கும் நோக்கத்திலும் இந்த துறை உருவாக்கப்பட்டு உள்ளது.
இதன் தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். எனினும், சமீபத்தில் அவர் பதவி விலகினார். இந்நிலையில், டிரம்ப் அரசின் நிர்வாகத்திற்கு வலு சேர்க்கும் வகையிலான தீர்ப்பு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது.
இதன்படி, அமெரிக்காவில் வசிக்கும் ஒவ்வொருவரின் பள்ளி பதிவுகள், வருவாய் விவரங்கள் மற்றும் மருத்துவ விவரங்கள் உள்பட பல்வேறு தனிநபர் தரவுகளையும் இந்த துறை ஆய்வு செய்ய முடியும். கோடிக்கணக்கான அமெரிக்க மக்களின் தனிநபர் விவரங்களை ஆய்வு செய்யும் வகையில் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன் தனியுரிமை சட்டங்களின் அடிப்படையில், சமூக பாதுகாப்பு தொடர்புடைய விவரங்களை ஆய்வு செய்வதற்கு மேரிலேண்ட் பெண் நீதிபதியான எல்லன் ஹாலண்டர் தடை விதித்திருந்த நிலையில், அந்த தடை நீங்கியுள்ளது.