தியாகராஜ நகர்: முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் கேரளாவில் சீசன் தொடங்கி உள்ளதால் அவை நெல்லை மாவட்டத்தில் லாரிகளில் அதிகளவில் கொண்டு வந்து குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. கிலோ ரூ.30க்கு விற்பதால் மக்கள் ஆர்வமுடன் பழங்களை வாங்கிச் செல்கின்றனர். மா, வாழை, பலா ஆகிய முக்கனிகளில் ஒன்றாக கருதப்படும் பலாப்பழம் கேரள மாநிலத்தில் அதிகளவில் விளைகின்றன. தமிழகத்தில் பண்ருட்டி, குமரி மாவட்டத்திலும் இவை அதிகம் விளைகின்றன. பலாப்பழத்தில் ஊட்டச்சத்து மிக்க மருத்துவ குணம் உள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, சி மற்றும் தயமின், பொட்டாசியம் கால்சியம், இரும்புச்சத்து, நையாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. பொட்டாசியம் அதிகம் உள்ளதால் ரத்த அழுத்தத்தை குறைத்து இதயநோய் வராமல் தடுகிறது. உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
குழந்தைகள் தேவையான அளவு உண்பதால் எலும்புகள் வலுவடைய உதவுகிறது. இவ்வாறு பல மருத்துவ குணம் வாய்ந்த பலாப்பழம் சீசன் காலத்தில் விலை குறைவாக விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். முழு பழமாகவும் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொல்லம், புனலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இவை விளைவிக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இதனால் தமிழக பழ வியாபாரிகள் கேரளா சென்று பலாப்பழத்தை வாங்கி லாரிகளில் கொண்டு வந்து விற்பனை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த பழம் தற்போது கொண்டுவந்து குவிக்கப்பட்டு விற்பனை செய்கின்றனர். கிலோ ரூ.30க்கு விற்பதால் மக்கள் ஆர்வமுடன் பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.
The post கேரளாவில் சீசன் தொடங்கியது: நெல்லையில் லாரிகளில் வந்து குவியும் பலாப்பழம்: கிலோ ரூ.30க்கு விற்பனை appeared first on Dinakaran.