
நெல்லை,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்தே பல்வேறு இடங்களில் கனமழையாக பெய்து வருகிறது. குறிப்பாக திருச்சூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இருந்து கேரளா வழியாக நெல்லைக்கு ஜாம் நகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை நீலாம்பூர் அருகே வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தை ஒட்டியிருந்த ராட்சத மரம் முறிந்து ரெயில் மீது விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரெயிலின் லோகோ பைலட் ரெயிலை உடனடியாக நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற ரெயில்வே ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று ரெயிலில் விழுந்து கிடந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.