
திருவனந்தபுரம்,
தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இடுக்கி, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று சிவப்பு எச்சரிக்கையும், மீதமுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இதனால் பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். விழிஞம் நகரில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 23 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். இன்று காலை கரைக்கு திரும்ப அவர்கள் திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது வரை திரும்பவில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.இதனால் மீனவர்களை தேடும் பணியை முடுக்கிவிட கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.