மும்பை : கேஒய்சி படிவங்களை சமர்ப்பிக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். வங்கிகளில் வாடிக்கையாளர்களின் அடிப்படை விவரங்களைப் பதிவுசெய்கிற கேஒய்சி (Know Your Customer) நடைமுறையால், தங்களுக்கு தொடர் அழைப்புகள் வருவதாகவும், இதனால் அசெளகரியம் ஏற்படுவதாகவும் வாடிக்கையாளர்கள் புகாா்கள் எழுப்பினர்.
இந்த நிலையில், மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கி குறைதீர் அதிகாரிகளின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், கேஒய்சி படிவங்களை சமர்ப்பிக்குமாறு வாடிக்கையாளர்களை தொடர்ந்து அழைப்பதை வங்கிகள் தவிர்க்க வேண்டும் என்றார். வாடிக்கையாளர்களின் புகார்களுக்குத் தீர்வு காண, வங்களின் நிர்வாக இயக்குநர்கள் முதல் கிளை மேலாளர்கள் வரை அனைவரும் ஒவ்வொரு வாரமும் நேரம் ஒதுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தங்கள் சொந்த நலன் கருதி வாடிக்கையாளர் சேவைகளை வங்கிகள் மேம்படுத்த வேண்டும் என்றும் கடன் வசூலிக்கும் போது, அடாவடியான நடவடிக்கைகளை வங்கிகள் தவிர்க்க வேண்டும் என்றும் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். டிஜிட்டல் மோசடிகளைத் தடுத்தல் உள்ளிட்டவற்றிலும் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
The post கேஒய்சி படிவங்களை சமர்ப்பிக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்க கூடாது : வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.