*ரூ.60 லட்சத்திற்கு வர்த்தகம்
கே.வி.குப்பம் : கே.வி.குப்பத்தில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நேற்று நடந்த சிறப்பு ஆட்டுச்சந்தையில் ரூ.60 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்துள்ளது.வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடக்கிறது.
இதுதவிர ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். அதன்படி நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு நேற்று சிறப்பு ஆட்டுச்சந்தை கூடியது. அதன்படி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை நடந்த ஆட்டுச்சந்தைக்கு மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் ஆடுகளை விற்கவும் வாங்கவும் வந்தனர்.
ஆடுகளின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பாக வெள்ளாடு, முத்துகிடாய், நாட்டு ரக கிடாய், கசையாடு, செம்மறி என பல்வேறு ரகங்கள் விற்பனைக்கு வந்தன.
இவற்றின் விற்பனை களை கட்டியது. நெல்லூர் சுடிபி ரக ஆடுஜோடி அதிகபட்சம் ரூ.96 ஆயிரத்திற்கும், மற்ற ரக ஆடுகள் ஜோடி ரூ.50 ஆயிரம் வரையும் என சுமார் ரூ.60 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post கே.வி.குப்பத்தில் பக்ரீத் முன்னிட்டு ஆட்டுச்சந்தை நெல்லூர் சுடிபி ரக ஆடுஜோடி ரூ.96 ஆயிரத்திற்கு விற்பனை appeared first on Dinakaran.