கூட்டணிக்குள் பாமக வராததால் கடும் விரக்தி தேஜ கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க அமைச்சர் அமித்ஷா மறுப்பு: ஓபிஎஸ், டிடிவி அப்செட்

3 hours ago 2

மதுரை: பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவர முடியாததால் தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அமித்ஷா, கூட்டணி கட்சியினரை சந்திக்கும் முடிவை கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் வேகம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணி பல ஆண்டுகளாக உறுதியாக உள்ள நிலையில், இந்த முறை மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் 2026 தேர்தலை மனதில்ெகாண்டு பாஜ கூட்டணியை வலுப்படுத்துவதற்கான பணிகளில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிரமாகியுள்ளார். ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்க தயாரில்லாத பல்வேறு கட்சிகளை ஊழல் வழக்குகள், குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றின் மூலம் கூட்டணிக்குள் கொண்டு வரும் வேலையில் அமித்ஷா ஈடுபட்டுள்ளார்.

அமித்ஷா பிளான் : கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அதிமுக 179 இடங்களிலும், பாமக 23, பாஜ 20, தமாகா 6, பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமமுக, புரட்சி பாரதம், மூமுகவின் இரு அமைப்புகள், மற்றும் பசும்பொன் தேசிய கழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் பெருமளவு வெற்றி கிடைக்கவில்லை. இதேபோல், அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும் போட்டியிட்டன. இந்த அணியும் தேறாத நிலையில், இந்த இரு அணிகளையும் பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்து ஒன்றாக தேர்தலை சந்தித்து வெற்றி பெற வேண்டும் என்பது தான் அமித்ஷாவின் நோக்கம்.

எடப்பாடி அலறல்: இந்த இலக்கை அடைவதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிகளவில் ரிஸ்க் எடுத்துவருகிறார். ஆனால், அவர் நினைக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் எந்த பணியையும் அவரால் அவ்வளவு சுலபமாக மேற்கொள்ள முடியவில்லை. ஏனெனில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை தவிர்த்து அதிமுக தலைமையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தனி அணி அமைத்து போட்டியிட்டன. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக் கும், பாஜ கூட்டணிக்கும் தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதனால், கூட்டல், கழித்தல் கணக்கு போட்ட அமித்ஷா அனைவரையும் கட்டாயம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டும் அல்லது வரவைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதற்காக கூட்டணிக்கு தயாரில்லை என தனி ரூட் போட நினைத்த எடப்பாடியை, ஒரு கட்டத்தில் வழக்கு, விவகாரங்களை தூசி தட்டி எடுத்த அமித்ஷா, சினிமாவில் வரும் காட்சியைப் போல பல கார்கள் மாறி டெல்லிக்கு ஓடி வரவைத்தார். கூட்டணியையும் உறுதி செய்தார்.

கூட்டணியில் அதிமுக: அடுத்த சில வாரங்களில் சென்னை வந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை அதிகாரப்பூர்வமாக இணையவைத்தார். எடப்பாடியின் இந்த முடிவில் அதிமுகவின் தொண்டர்கள் மட்டுமின்றி, இரண்டாம் கட்ட தலைவர்கள் பலருக்கும் உடன்பாடு இல்லை என்றே கூறப்படுகிறது. எடப்பாடியை அமித்ஷா சந்தித்த நிலையில், ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் பயணிக்கும் டிடிவி மற்றும் ஓபிஎஸ்சை சந்திக்காதது அவர்களுக்கு வருத்தத்தை தந்த நிலையில், இருவரும் கூட்டணியில் நீடிப்பதாக பாஜ மாநில தலைவர்கள் ஆறுதலாக கூறி வந்தனர்.

பாமக நோக்கி பார்வை: ஒருவழியாக அதிமுகவை கூட்டணி வலைக்குள் கொண்டு வந்த அமித்ஷாவின் அடுத்த பார்வை பாமக பக்கம் திரும்பியது. ஆனால், பாஜவுடன் கூட்டணி அமைக்க டாக்டர் ராமதாஸ் தயாரில்லை. சிபிஐ வழக்குகளை வைத்து அன்புமணியை வழிக்கு கொண்டு வந்த அமித்ஷாவால் அவ்வளவு சுலபமாக ராமதாசை கொண்டு வரமுடியவில்லை. பாஜவோடு இணைந்து பயணித்த பல்வேறு அரசியல் கட்சிகள் காணாமல் போனதை மனதில் வைத்து ராமதாஸ் பாஜ அல்லாத கூட்டணி என்பதில் உறுதியாக நிற்கிறார். இதனால், கட்சியில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே அதிகார போட்டி உருவாகியுள்ளது.

பாஜ கூட்டணியை முன்வைத்து பாமக பிளவு படும் சூழல் உருவாகியுள்ளது. டாக்டர் ராமதாசை, மதுரையில் அமித்ஷாவுடன் சந்திக்க பிரதான திட்டத்துடன் தான் அமித்ஷாவின் மதுரை பயணம் திட்டமிடப்பட்டது. ஆனால், ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி மற்றும் பல்வேறு உயரதிகாரிகள், சமுதாய தலைவர்கள் மூலம் பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் ராமதாஸ் உறுதியாக உள்ளதால், தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விபரம் அமித்ஷாவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித்ஷா டென்சன்: இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அமித்ஷா, அன்புமணிக்கு குறிப்பிட்ட காலஅவகாசத்தை கொடுத்துள்ளதாகவும், அதற்குள் கட்சி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் அல்லது மகாராஷ்டிரா பாணியில் சிவசேனாவை பிளவுபடுத்தி இரு அணியாக்கியது போல பாமகவை உடைத்து இரு அணியாக்கி, தங்களுடன் பிரதான அணியை கூட்டணியில் சேர்க்க வேண்டுமென கடுமையாக உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், மதுரையில் தன்னை கூட்டணி கட்சியினர் யாரும் சந்திக்க வேண்டாம் என கூறியுள்ளார் அமித்ஷா . இந்த தகவல் ஏற்கனவே வெயிட்டிங்கில் இருந்த டிடிவி.தினகரன் மற்றும் ஓபிஎஸ் தரப்பிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் அமித்ஷா சந்திப்பு தள்ளிப் போனது இருவருக்கும் மன வருத்தத்தை தந்துள்ளது.

ராமதாஸ் சென்னை பயணம்: இதற்காக நேற்று மதுரையில் கட்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த டிடிவி.தினகரன், கட்சி நிகழ்ச்சியை முடித்துவிட்டு, திருச்சிக்கு கிளம்பி சென்றார். அதே நேரம் கட்சி பிரச்னைகளை இத்தனை நாட்களாக தைலாபுரம் தோட்டத்தில் வைத்து டீலிங் செய்த டாக்டர் ராமதாஸ், பாஜ மிரட்டலால் கூட்டணி ெதாடர்பாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்த திடீரென சென்னை கிளம்பி சென்றார்.

ஓபிஎஸ் குமுறல்: நேற்று முன்தினம் மதுரையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து சுமார் அரைமணி நேரம் வரை பேசிய ஓபிஎஸ், பாஜவிற்காக தர்மயுத்தம் நடத்தி கூட்டணிக்கு வந்து, இன்று வரை தொடரும் நிலையில் எடப்பாடிக்காக அமித்ஷா தங்களை புறக்கணிப்பது குறித்து தனது மிகுந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

* மதுரை வந்தார் அமித்ஷா பாஜ நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை
மதுரை ஒத்தக்கடையில் இன்று மாலை நடக்கும் தென்மாவட்ட பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு தனி விமானம் மூலம் மதுரை வந்தார். இரவு தனியார் விடுதியில் ஓய்வெடுக்கும் அமித்ஷா, இன்று காலை 11.20 மணிக்கு மீனாட்சி அம்மன் ேகாயிலில் தரிசனம் செய்கிறார். அங்கிருந்து விடுதிக்கு சென்று ஓய்வெடுக்கிறார். பின்னர் மதிய உணவிற்கு பிறகு, கட்சி மாநில நிர்வாகிகளை சந்திக்கிறார். மாலை 4.05 மணிக்கு ஒத்தக்கடையில் நடக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

கூட்டம் முடிந்து 5.55 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அமித்ஷா வருகையால் மதுரை விமான நிலையம், அதனை சுற்றியுள்ள பகுதிகள், மற்றும் மாநகர் மாவட்ட எல்லைக்குள் நேற்றும், இன்றும் டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை விமான நிலையம், ரிங்ரோடு தங்கும் விடுதி, மீனாட்சி அம்மன் கோயில், ஒத்தக்கடை கூட்டம் நடக்கும் பகுதி மற்றும் அமித்ஷா பயணம் செய்யும் வழித்தடங்களில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post கூட்டணிக்குள் பாமக வராததால் கடும் விரக்தி தேஜ கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க அமைச்சர் அமித்ஷா மறுப்பு: ஓபிஎஸ், டிடிவி அப்செட் appeared first on Dinakaran.

Read Entire Article