நியூ சண்டிகர்: ஐபிஎல் 18வது சீசன் டி20 தொடரின் குவாலிபயர் போட்டியில் பஞ்சாபை 101 ரன்னில் சுருட்டிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
சண்டிகரில் நேற்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பிரியான்ஸ் ஆர்யா 7, பிரப்சிம்ரன் சிங் 18 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 2, இங்லீஷ் 4, வதேரா 8, ஷஷாங்க் சிங் 3, இம்பாக்ட் பிளேயராக வந்த முஷீர் கான் டக் அவுட்டாக அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பொறுப்பாக விளையாடிய ஸ்டாய்னிஸ் 26 ரன்னுடன் நடையை கட்டினார். அடுத்து வந்த ஹர்பிரீத் பிரார் 4, ஓமர்சாய் 18 ரன்னில் ஆட்டமிழக்க பஞ்சாப் கிங்ஸ் அணி 101 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களூரு அணி தரப்பில் ஹேசல்வுட், சுயாஸ் சர்மா தலா 3 விக்கெட்டும், யஷ் தயாள் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, எளிய இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தின் வென்றது. அதிரடி அரைசதம் விளாசிய துவக்க வீரர் பில் சால்ட் 56 ரன் (27 பந்து, 3 சிக்ஸ், 6 பவுண்டரி), கேப்டன் ரஜத் படிதார் 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கோஹ்லி 12, மயங்க் அகர்வால் 19 ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அடுத்ததாக, குஜராத்-மும்பை இடையேயான எலிமினேட்டர் போட்டியில் வெல்லும் அணியுடன் பஞ்சாப் மோதும்.
The post குவாலிபயரில் பஞ்சாப் படுதோல்வி; ஐபிஎல் பைனலில் ஆர்சிபி appeared first on Dinakaran.