குழந்தைகள் விரும்பும் நேரு மாமா

6 months ago 19

“அதோ பாரு ரோடு
ரோட்டு மேல காரு
காருக்குள்ள யாரு
நம்ப மாமா நேரு
நேரு என்ன சொன்னாரு
நல்லா படிக்க சொன்னாரு”

இந்த பாடல் பல ஆண்டுகாலமாக குழந்தைகளால் பாடப்படுகிறது. நேருவின் மீது குழந்தைகள் கொண்ட அன்பின் வெளிப்பாடாக இந்தப் பாடல் திகழ்கிறது.

இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள். அவர்களை நாம் வளர்க்கும் விதம்தான் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். என்பது ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது கொண்ட நம்பிக்கையை வெளிப்படுத்தும் சொற்கள்.

குழந்தைகள் மீது அவர் கொண்ட அன்பும் நம்பிக்கையும் உறுதியானவை. அதனால்தான் அவர் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் நாள் இந்தியாவில் குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவர் குறித்து நினைவு கொள்வதன் மூலம் தற்காலக் குழந்தைகள் நேருவைப் பற்றி அறிந்துகொள்ள இயலும்.

பண்டித ஜவர்ஹலால் நேரு 1889, நவம்பர் 14ஆம் நாள் அலகாபாத்தில் மோதிலால் நேரு, சொரூபராணி இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். அவருக்கு சிறு வயதிலிருந்தே கற்பதில் ஆர்வம் இருந்தது. வெறும் பாட நூல்கள் மட்டுமின்றி இதர நூல்களைப் படிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

குழந்தைப் பருவத்தில் அரேபிய இரவுகள், ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட நூல்களோடு பல்வேறு விதமான நாட்டுப்புறக் கதைகளை படிப்பதில் அவருக்கு விருப்பம். நேரு தனது மேற்படிப்புக்காக இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு ஹேரோ போர்டிங் பள்ளியில் சேர்ந்தார்.

அவரது 20வது வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அப்போதே அந்தப் பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களின் அரசியல் விவாதங்களில் பங்கேற்பதில் ஆர்வமிக்கவராக இருந்தார் நேரு. அங்கு விவாதிக்கப்பட்ட உலகளவிலான அரசியல் கருத்துக்களின் மூலமாகவே அவரது உலகம் குறித்த பார்வை மெருகேறியது.

பட்டம் பெற்ற பிறகு 1912ஆம் ஆண்டு இந்தியா திரும்பி, தனது தந்தையுடன் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார் நேரு. அந்த நேரத்தில் முதல் உலகப்போர் தொடங்கியிருந்தது. அப்போது பால கங்காதர திலகர், அன்னி பெசன்ட் அம்மையார், கோபாலகிருஷ்ண கோகலே ஆகியோர் இந்தியாவின் அரசியலில் பிரபலமாக இருந்தனர். அவர்களின் அரசியல் செயல்பாடுகளைக் கண்ட நேரு நேரடியாக அரசியலில் நுழைந்தார். மாணவராக இருந்த காலத்திலிருந்தே அயல் நாட்டின் பிடியில் இருந்து பாதிக்கப்பட்டு விடுதலைக்காகப் போராடுகின்ற தேசங்கள் பற்றி அறிந்துகொள்ள அவர் ஆர்வம் காட்டிவந்தார்.

இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அவர் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்து போராடினார். இவரது தந்தையும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். இருவரும் பல்வேறு அரசியல் கூட்டங்களில் பங்கேற்றனர். 1916ஆம் ஆண்டு இவர் மகாத்மா காந்தியை சந்தித்தார். அவரது சேவைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட நேரு, காந்தி ஒரு தீவிர தேசியவாதி என்பதையும் புரிந்துகொண்டார். தொடக்க காலத்தில் இருந்தே நேரு சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றிருந்தார். நிர்வாகம் சார்ந்த அவரது பின்னணி அவருக்குப் பெரிதும் உதவியது. மேலும் அவரது அனுபவம் சமூகத்தின் பலதரப்பட்ட மக்களின் பிரச்னைகளை உடனடியாகப் புரிந்துகொண்டு அதற்கு உடனடி தீர்வு காணவும் உதவியது.

வெறுமனே விடுதலை பெறுவது மட்டும் நேருவின் நோக்கமாக இருக்கவில்லை. அவர் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றம் குறித்து கனவுகண்டார். அதற்காகவே அவர் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் இயக்கங்களிலும் பங்கேற்றார். 1920-22 ஆம் ஆண்டுகளில் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தின்போது அவர் இருமுறை சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தது.

பண்டிட் நேரு 1923 செப்டம்பர் மாதம், அனைத்து இந்திய காங்கிரஸ் குழுவின் பொதுச் செயலரானார். 1926ல் இத்தாலி, சுவிஸ்சர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, ரஷியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். இந்திய தேசிய காங்கிரஸின் பிரதிநிதியாக பெல்ஜியம் புரூசல் பகுதியில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட நாடுகளின் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். 1927 ல் மாஸ்கோவில் நடைபெற்ற அக்டோபர் சோஷியலிஸ்ட் புரட்சியின் 10வது ஆண்டு விழாவில் அவர் கலந்துகொண்டார். 1926-ல் மெட்ராஸ் காங்கிரஸ் மாநாட்டில் ஈடுபடுவதற்கு விடுதலை போராட்டத்தில் நேரு தூண்டுகோலாக இருந்தார். 1928ல் சைமன் கமிஷனுக்கு எதிராக நடைபெற்ற ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கியதால் காவலர்கள் அவர் மீது தடியடி நடத்தினர். 1928, ஆகஸ்ட் 29 அவர் அனைத்து கட்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.

அவர் தந்தை திரு. மோதிலால் நேருவின் பெயரில் கொண்டுவரப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மறுசீரமைப்பதற்கான நேருவின் அறிக்கையில் முக்கியப் பங்கு வகித்தார். அதே ஆண்டில், இந்தியாவுடனான ஆங்கிலேயரின் இணைப்பைத் துண்டித்து “சுதந்திர இந்தியா” என்ற அமைப்பை அவர் நிறுவி, அதன் பொதுச் செயலராகவும் பொறுப்பேற்றார்.

1930ஆம் ஆண்டு காந்தி உப்புச் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். இதன் மூலம் சாமானிய மக்களின் கோரிக்கையும் விடுதலை இயக்கத்தின் முக்கியக் கோரிக்கையாக மாறமுடியும் என்று உணர்த்தினார் அவர். தனது வாழ்நாளில் அதிக முறை சிறையில் அடைக்கப்பட்ட பிரதமராகவும் இவர் அறியப்படுகிறார். ஒட்டுமொத்தமாக நாட்டின் விடுதலைக்காக 9 முறை சிறைக்கு சென்றுள்ளார் நேரு. சிறையில் இருந்தவாறே ஏரளாமாக எழுதவும் செய்தார் அவர். 1935ஆம் ஆண்டு சிறையில் இருந்தபோது தனது சுயசரிதையை எழுதி முடித்தார் நேரு. அது 1936ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகம் வெறும் நேருவின் நினைவுகள் மற்றும் வாழ்க்கை குறிப்பாக மட்டும் பார்க்கப்படவில்லை. மாறாக விடுதலைக்கு முந்தைய சமூகம் குறித்த புரிதலை ஏற்படுத்தும் முக்கிய ஆவணமாகவும் கருதப்படுகிறது.

இவ்வாறு பல போராட்டங்களில் ஈடுபட்டு நாட்டு விடுதலைக்காக உழைத்த நேருவை இந்தியாவின் பிரதமராக்க காந்தி விரும்பினார். அதன்படி முதல் பிரதமராக நியமிக்கப்பட்ட நேரு விடுதலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றிபெற்று 17 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராகச் செயல்பட்டு நாட்டு முன்னேற்றத்திற்காகப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சிறந்த திட்டங்களைத் தீட்டி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றார். 1964ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் நாள் நேரு மறைந்தார். அவர் பெயரில் பல பொது நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. டெல்லியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் பெருமைகளுள் ஒன்றாகும்.

The post குழந்தைகள் விரும்பும் நேரு மாமா appeared first on Dinakaran.

Read Entire Article