குழந்தைகள் மரண ஓலமிட்டனர்; தீப்பிடித்த ஓட்டலில் இருந்து தப்பிக்க ஜன்னல் வழியாக குதித்தனர்: துருக்கி விபத்தை நேரில் பார்த்தவர்கள் வேதனை

5 months ago 13

கர்தல்காயா: துருக்கியில் தீ விபத்து ஏற்பட்ட 12 மாடி ஓட்டலில் இருந்து உயிர் பிழைக்க சிலர் ஜன்னல் வழியாக குதித்ததாகவும், குழந்தைகளின் மரண ஓலங்கள் கேட்டும் தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். துருக்கியின் போலு மாகாணத்தில் உள்ள கொரோக்லு மலைகளில் உள்ள கர்தல்காயா பகுதியில் உள்ள கிராண்ட் கர்தல் ஓட்டலில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஓட்டலில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் 76 பேர் பலியாகினர். 51 பேர் காயமடைந்தனர். இதுவரை 45 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் அருகில் இருந்த ஓட்டலில் இருந்தபடி தீ விபத்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பல வேதனையான தகவல்களை கூறி உள்ளனர். பக்கத்து ஓட்டல் ஊழியர்கள் செடின், கரகிசா ஆகியோர் அளித்த பேட்டியில், ‘‘தீயில் சிக்கியவர்கள் தங்களை காப்பாற்ற கூக்குரல் எழுப்பினர். சிலர் ஜன்னல்களை உடைத்தனர். தீயின் வெப்பத்தாலும் புகையாலும் இனியும் தாக்குபிடிக்க முடியாது என கருதியவர்கள் எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டுமென ஜன்னல் வழியாக கீழே குதித்தனர். குழந்தைகளின் அழு குரல்கள் கேட்டன ” என்றனர்.

The post குழந்தைகள் மரண ஓலமிட்டனர்; தீப்பிடித்த ஓட்டலில் இருந்து தப்பிக்க ஜன்னல் வழியாக குதித்தனர்: துருக்கி விபத்தை நேரில் பார்த்தவர்கள் வேதனை appeared first on Dinakaran.

Read Entire Article