சின்னமனூர், மே 7: சின்னமனூர் நகர் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமரா அமைத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் சுமார் 85 ஆயிரம் பேரும், குச்சனூர், மார்க்கையன்கோட்டை, ஓடைப்பட்டி, ஹைவேவிஸ் உள்ளிட்ட நான்கு பேரூராட்சி பகுதிகளில் சுமார் 1.50 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
இந்த நிலையில், இந்தப் பகுதிகளில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையிலும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டறியும் வகையிலும் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் அமைக்க காவல் துறையினர் முடிவு செய்தனர். ஏற்கனவே சின்னமனூர் நகரின் முக்கிய இடங்களில் பொதுமக்களின் உதவியுடன் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் கிராமப்பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களை அமைத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக, இன்ஸ்பெக்டர் பாலாண்டி தலைமையில் பொதுமக்களின் உதவியுடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.மார்க்கையன்கோட்டை பேரூராட்சி, குச்சனூர் பேரூராட்சி, சீப்பாலக்கோட்டை, எம்.துரைச்சாமிபுரம் கன்னியம்பட்டி, ஊத்துப்பட்டி, பெருமாள்பட்டி, வேப்பம்பட்டி,எர்ரசக்கநாயக்கன்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் 75 நவீன சிசிடிவி கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை நள்ளிரவிலும் காட்சிகளை துல்லியமாக பதிவு செய்யக்கூடிய திறன் பெற்றவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலாண்டி கூறுகையில், “பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் உதவியுடன் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், சின்னமனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்கட்டமாக 75 அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பல கிராமங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி தொடரும். இதன்மூலம் குற்றச் செயல்களை தடுக்கவும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் முடியும்’’ என்றார்.
The post குற்றச்செயல்களை தடுக்க நடவடிக்கை சின்னமனூர் ஒன்றிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பு appeared first on Dinakaran.