குறுக்கு தெருவில் பைக்குக்கு வழிவிடும் பிரச்னை; வாலிபரை தாக்கி சட்டையை கிழித்த இன்ஸ்பெக்டரின் செயலால் அதிர்ச்சி: காயத்துடன் ஆஸ்பத்திரியில் அட்மிட்

1 day ago 2


அண்ணாநகர்: நடுரோட்டில் வாலிபரை சாதாரண உடையில் இருந்த இன்ஸ்பெக்டர் சரமாரியாக தாக்கி சட்டையை கிழித்துவிட்டார். குறுக்கு தெருவில் பைக்குக்கு வழிவிடும் பிரச்னையில் இந்த சம்பவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் முகமது சபீர்(34). இவர் புரசைவாக்கம் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகின்றார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகனை அமைந்தகரை காந்தி தெருவில் உள்ள தனியார் பள்ளியில் தினமும் விட்டுவிட்டு வருவாராம். நேற்றுகாலை பள்ளியில்விட்டுவிட்டு காந்தி குறுக்கு தெருவில் வந்துள்ளார். அந்த சமயத்தில், திருமுல்லைவாயல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் சாதாரண உடையில் பைக்கில் அந்த வழியாக வந்துள்ளார்.

குறுக்கு தெரு என்பதால் பைக் செல்லமுடியாமல் எதிரெதிராக நின்றுள்ளது. இதையடுத்து இன்ஸ்பெக்டர், ‘’பைக்கை எடு’’ என்று அதிகார தோரணையில் சொன்னபோது முகமது சபீர், ‘’வழியில்லாமல் எப்படி செல்வது’’ என்று கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த இன்ஸ்பெக்டர் அவரை எச்சரித்துள்ளதாக தெரிகிறது. இதற்கு சபீர், இன்ஸ்பெக்டரை பார்த்து போடா என்று கூறியதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த இன்ஸ்பெக்டர் முகமது சபீரை சரமாரியாக தாக்கியுள்ளார். ‘’இன்ஸ்பெக்டர் என்று தெரியாமல் பேசிவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்’’ என்று காலில் விழுந்து கதறியபோதும் சட்டை, பனியனை கிழித்து அவரது கைகளை பின்பக்கமாக கட்டி முகம் உட்பட இடத்தில் தாக்கியுள்ளார்.

இதை பார்த்ததும் பொதுமக்கள் ஓடிவந்து விஷயத்தை கேட்டதுடன், ‘’ஒரு வாலிபரை எப்படி தாக்கலாம். உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது யார்’ என்று கேட்டு வாக்குவாதம் செய்ததால் இன்ஸ்பெக்டர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதையடுத்து காயம் அடைந்த முகமது சபீரை சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post குறுக்கு தெருவில் பைக்குக்கு வழிவிடும் பிரச்னை; வாலிபரை தாக்கி சட்டையை கிழித்த இன்ஸ்பெக்டரின் செயலால் அதிர்ச்சி: காயத்துடன் ஆஸ்பத்திரியில் அட்மிட் appeared first on Dinakaran.

Read Entire Article