சென்னை: குரூப் 2, 2ஏ பதவிக்கான தேர்வில் தேர்வர்கள் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வருகிற 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தர ராஜ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகள் உள்ள பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு தேர்வர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் சில தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை குறைபாடாக, சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக வருகிற 15ம் தேதி இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் அத்தேர்வர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அத்தேர்வர்கள் அனைவரும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு தளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத தேர்வர்களின் உரிமைகோரல், விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post குரூப் 2, 2ஏ பதவிக்கான தேர்வு தேர்வர்கள் சரியான சான்றிதழை பதிவேற்றம் செய்ய அவகாசம்: டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.