குரங்குநாதர் திருக்கோவில்

1 day ago 3

ராஜகோபுர தரிசனம்!

திருச்சி மாவட்டம் முசிறிக்கு அருகில் காவேரிக்கரையில் சீனிவாசநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது குரங்குநாதர் திருக்கோவில். சோழர் கட்டடக் கலையின் சிறந்த சான்றாக விளங்கும் இந்தக் கோவில், 9ம் நூற்றாண்டில் முதலாம் ஆதித்த சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.இந்தக் கோவிலில் பரமசிவன் ‘குரங்குநாதராகவும்’ தேவியார் ‘வெள்ளை அம்பிகை’ என அழைக்கப்படுகிறார்கள். இத்தலத்தில் பரமசிவனை சுக்ரீவன் வழிபட்டதால், ‘குரங்குநாதர்’ என்று அழைக்கப்படுகிறது.

இத்தலத்தின் விமானம் இரு நிலை நாகர பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய அனைத்து பகுதிகளும் தெளிவான நிலைப்பாட்டுடன் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் முழுதும் கூர்மையான கோணங்கள், எளிமையான சிற்பங்கள், அழகு மிகுந்த யாளி வடிவங்கள் காணப்படுகின்றன.கோவிலின் மதில் சுவர்களில் காணப்படும் தட்சிணாமூர்த்தி, நான்முகன், விஷ்ணு, பூவராகர் போன்ற தேவதைகள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் சோழரின் சிற்பக்கலையின் நுட்பமும், பரிணாம வளர்ச்சியும் தெளிவாக காணமுடிகிறது.

கோவிலில் காணப்படும் கல்வெட்டுகள் முதலாம் பராந்தக சோழன் காலத்தைச் சேர்ந்தவை. அவை சோழர் ஆட்சிக் காலத்தின் சமூக, பொருளாதார, பக்தி சார்ந்த விஷயங்களை வெளிப்படுத்துகின்றன.இந்த ஆலயம் இந்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பு கீழ் உள்ளது. பழமையானதாலும், சிறப்புமிக்க கட்டுமான முறை கொண்டதுமான இந்த ஆலயம், கலாச்சார பாரம்பரியத்தின் உயிராகக் கருதப்படுகிறது.சீனிவாசநல்லூர் குரங்குநாதர் கோவிலின் கோபுரம் கலை பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது. இந்தக் கோபுரம், சோழர் காலக் கட்டிடக் கலையின் சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகிறது.

கோவிலின் கோபுரம் இரு நிலைகளில் அமைக்கப்பட்டுள்ளது, இது சோழர்களின் நாகர பாணியில் உருவாக்கப்பட்டதுதான் இதன் முக்கிய சிறப்பு. இந்த கோபுரத்தின் வடிவமைப்பு எளிமையானது என்றாலும் அவற்றின் ஒவ்வொரு பகுதியும் நுட்பமானது. கோபுரத்தின் பல பகுதிகளில் பல வகையான சிறபங்களை காண முடியும். அவை ஒவ்வொன்றும் கோபுரத்தை அழகு படுத்தும் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன. குறிப்பாக, கோபுரத்தில் ‘யாளி’ போன்ற சிற்பங்கள் சோழர் கால சிற்பக்கலைக்கான சிறப்புகளை வெளிப்படுத்துகின்றன.கோபுரத்தின் உச்சம் வரை அடுக்குகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு அடுக்கிலும் சிறந்த சிற்பங்கள் மற்றும் சின்னங்கள் காணப்படுகின்றன. இந்த அடுக்குகள் கோவிலின் முக்கோண வடிவ அமைப்பினை வழிப்படுத்துகின்றன.

கோபுரத்தில் சில தெய்வங்களின் சிற்பங்கள் எளிய மற்றும் நுட்பமான வடிவங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோபுரத்தின் வடிவமைப்பு துல்லியமாக கணக்கிடப்பட்டதாகும். இங்கே பயன்படுத்தப்பட்ட விகிதாச்சார வடிவங்கள், கோபுரத்திற்கு அழகான தோற்றத்தினை கொடுக்கின்றன. இத்தலத்தின் கோபுரம் அதன் செழுமையான வடிவமைப்பு, சிறப்பான சிற்பங்கள், அழகான அமைப்பு மூலம் தமிழ் கலாச்சாரத்திற்கு அரும்பெரும் அடையாளமாக உள்ளது.

திலகவதி

The post குரங்குநாதர் திருக்கோவில் appeared first on Dinakaran.

Read Entire Article