
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவி உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையொட்டி பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவியும் கன்னியாகுமரி கடற்கரையில், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடல் அலையின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் எனவும், கால்களை நனைக்க வேண்டாம் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கடற்கரையில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.