சென்னை: குமரியில் அணுக் கனிமச் சுரங்கத்துக்கு தமிழக அரசு ஒரு போதும் அனுமதி வழங்காது’ என்று காங்.,எம்எல்ஏ ராஜேஷ்குமார் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று துணை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்(காங்கிரஸ்) பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி, கிள்ளியூர் தாலுகா, கல்குளம் தாலுகா, சைமன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 1,144.6.18 ஹெக்டேர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் இருக்கிற கனிம வளங்களைப் பிரித்தெடுப்பதற்காக, 30 அடி ஆழம் வரை தோண்டி மணல் எடுப்பதற்கு இந்திய அரிய வகை மணல் ஆலைக்கு, அதற்குரிய அனுமதியைக் கொடுத்ததாக, ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து ஒரு கருத்து கேட்புக் கூட்டத்தை பத்மநாபபுரத்தில் நவம்பர் 1ம் தேதி வைத்தார்கள். ஆனால், மக்களுடைய பல்வேறு போராட்டத்தால் தற்காலிகமாக அந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நிறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், அதிகமாக புற்றுநோய் பாதிக்கக்கூடிய மாவட்டமாக உள்ளது. எனவே, சுகாதாரக் கேடு மற்றும் சுற்றுச்சூழல் அங்கு அதிகமாகப் பாதிக்கப்படும் என்பதால் தமிழக அரசு தலையிட்டு அந்த அணுக் கனிமச் சுரங்கத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். அவை முன்னவர் துரைமுருகன்: நில உரிமையாளர்களிடம் இசைவு பெற்ற பின்னர் தான், மாநில அரசால் சுரங்க குத்தகைகளை வழங்க இயலும். பொது மக்களின் எதிர்ப்பை மீறி, இந்த நிறுவனம் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
The post குமரியில் அணுக் கனிமச் சுரங்கத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது: சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம் appeared first on Dinakaran.