குமரியின் அடையாளமாக மாறிய கண்ணாடி பாலம்: லட்சக்கணக்கானோர் பார்வை: விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை இடையே அமைக்கப்பட்டது

4 months ago 10

கன்னியாகுமரி: கன்னியாகுமரியின் புதிய அடையாளமாக கண்ணாடி நடைபாலம் உருவாகியுள்ளது. இதனை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை பார்வையிட்டு முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் குளித்து மகிழ்ந்து, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுகளில் பயணித்து, கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளூர் சிலை ஆகியவற்றை பார்த்து மகிழ்கின்றனர்.

திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் கடலுக்கடியில் சுண்ணாம்பு பாறைகள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கடல் அலையின் சீற்றம் மற்றும் தாழ்வான நீர்மட்டம் ஏற்படும் காலங்களில் அடிக்கடி திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தடைபடும் நிலை இருந்து வந்தது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடும் சுற்றுலா பயணிகள் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலையை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்லும் நிலை நிலவி வந்தது. எனவே, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் வகையில் பாலம் அமைக்க சுற்றுலாப் பயணிகள் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ரூ.38 கோடி செலவில் புதிய கண்ணாடி நடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் மற்றும் கடல் மட்டத்தில் இருந்து 7 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் நடுவே சுமார் 2.4 மீட்டர் அகலத்திற்கு கண்ணாடி இழை பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கடல் மீது கட்டப்பட்ட முதல் கண்ணாடி பாலம் இதுவாகும். திருவள்ளுவர் சிலை 25வது ஆண்டு வெள்ளிவிழா கொண்டாட்டத்தையொட்டி, கடந்த டிசம்பர் 31ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கண்ணாடி பாலத்தினை திறந்து வைத்தார்.

அன்று முதல் கண்ணாடி பாலத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி கடந்த ஜனவரி மாதம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 518 பேர் இதனை பார்வையிட்டனர். இந்த மாதம் 12ம் தேதி வரை 88 ஆயிரத்து 275 பேர் பார்வையிட்டனர். 13ம்தேதி 7035, 14ம்தேதி 7787, 15ம்தேதி 7617 சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தை கண்டு ரசித்தனர். நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் மதியம் 2 மணிக்கு பின்னர் காற்று அதிகமாக வீசியதால் படகு சேவை நிறுத்தப்பட்டது. நேற்று 5024 சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தில் நடந்து சென்று கடல் அழகை ரசித்தனர். இந்த கண்ணாடி நடைபாலம் கன்னியாகுமரியின் புதிய அடையாளமாக மாறிவருகிறது.

* மாறிய சீசன்

கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் மற்றும் கோடை விடுமுறை காலமான ஏப்ரல், மே மாதம் சீசன் என இரண்டு சீசன் தான் உண்டு. சபரிமலை சீசன் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி 21 வரை நடைபெறும். தற்போது சபரிமலை சீசன் முடிந்த பிறகும் சுற்றுலா பயணிகள் வருகை குறையவில்லை. மகா கும்பமேளா நடைபெறும் நிலையில் வடமாநில சுற்றுலா பயணிகள் பலர் கன்னியாகுமரிக்கும் வருகை தருகின்றனர். நாள்தோறும் அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post குமரியின் அடையாளமாக மாறிய கண்ணாடி பாலம்: லட்சக்கணக்கானோர் பார்வை: விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை இடையே அமைக்கப்பட்டது appeared first on Dinakaran.

Read Entire Article