
குமரி,
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை பண்டாரக்காடு பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். இவரது மனைவி வர்க்கீஸ் அம்மாள் (வயது 75). இவர் நேற்று காலை மாடத்தட்டுவிளை கான்வென்ட் சந்திப்பு பஸ் நிறுத்தத்தில் இருந்து தோட்டியோடு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறினார்.
பஸ் தோட்டியோடு சென்றதும் நிறுத்தத்தில் வர்க்கீஸ் அம்மாள் இறங்க முயன்றார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 3¼ பவுன் நகை மாயமாகி நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே வர்க்கீஸ் அம்மாள் இதுபற்றி டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கூறி விட்டு பஸ் முழுவதும் தேடி பார்த்தார். ஆனாலும், நகை கிடைக்கவில்லை. கூட்டநெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம ஆசாமி நகையை அபேஸ் செய்தது தெரியவந்தது.
பின்னர், இதுகுறித்து வர்க்கீஸ் அம்மாள் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இரணியல் போலீசார் விசாரணை நடத்தி மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.