
சென்னை,
தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் உருவான 'குபேரா' திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் கதை ரீதியாக நல்ல விமர்சனங்களையும், திரைக்கதை ரீதியாக கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. அதோடு படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை இயல்பாக செய்திருக்கும் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோருக்கும் ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் இந்தப் படத்தின் நாயகியான ராஷ்மிகா மந்தனா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, படக்குழுவினர் பற்றியும், குபேரா படத்தில் தனது கதாபாத்திரம் பற்றியும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "இயக்குனர் சேகர் கம்முலாவிடம் ஏதோ ஒரு மந்திரம் உள்ளது. அதுதான் 'சமீரா' கதாபாத்திரத்தில் என்னை இந்த அளவு நடிக்க வைத்திருக்கிறது. கலைத்துறையின் மீது அவருக்கு இருக்கும் காதலை, அவரது படங்களின் வாயிலாக நாம் தெரிந்துகொள்ள முடியும். அதுதான், அவருடன் இணைந்து பணியாற்ற எனக்குள் ஆர்வத்தை ஏற்படுத்தியது. படத்தில் என்னை ரசிகர்கள் அனைவரும் சமீராவாகவே பார்க்க, இயக்குனரின் பங்களிப்புதான் காரணம்" என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர் தன்னுடைய சக நடிகர்கள் தனுஷ், நாகர்ஜுனா ஆகியோரையும் பாராட்டி கூறியிருப்பதுடன், படக்குழுவினர் அனைவரையும் குறிப்பிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார். அதோடு ரசிகர்களுக்கு, 'இந்தப் படம் உங்கள் நேரத்தை வீணடிக்காது. நம்புங்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.