குன்னூர், ஜூன் 5: குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் 551 அக்னிபாத் வீரர்கள் சத்திய பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைதொடர்ந்து ராணுவ வீரர்களின்அணி வகுப்பு நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பயிற்சி பெறும் வீரர்கள் நாட்டின் பல இடங்களுக்கும் பணிபுரிய அனுப்பப்படுகின்றனர். இம்முகாமில், 6 மாதங்கள் பயிற்சி பெற்ற, 551 பேர், அக்னி பாத் திட்டத்தில் அக்னி வீரர்களாக பணிபுரிய சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் நடந்தது. பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது அக்னி பாத் வீரர்கள், சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர். வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை தக்சன் பாரத் ஏரியா மேஜர் ஜெனரல் விடி. மேத்யூ மற்றும் ராணுவ பயிற்சி மையத்தின் கமாண்டன்ட் கிறிஸ்துதாஸ் ஆகியோர் ஏற்று கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர், தங்கள் பிள்ளைகள் அக்னி வீரர்களாக, அணி வகுத்து வந்த காட்சியை கண்டு பெருமிதம் அடைந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியை சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர். பயிற்சியில் சிறந்து விளங்கிய, 11 அக்னி பாத் வீரர்களுக்கு பதக்கங்களும். நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மூத்த அதிகாாிகளும், இளநிலை அதிகாாிகளும் பலர் கலந்து கொண்டனர். பயிற்சி முடித்த வீரர்கள் பல்வேறு இடங்களின் எல்லைப்பகுதிக்கு அனுப்பப்பட உள்ளனர்.
The post குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் அக்னிபாத் வீரர்கள் சத்திய பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.