புதுடெல்லி: மசோதா விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உச்ச நீதிமன்றத்திற்கு விளக்கம் கேட்டது தொடர்பாக டெல்லியில் திமுக எம்பி பி.வில்சன் அளித்த பேட்டியில்,\\”உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆய்வு செய்யக்கோரி குடியரசுத் தலைவர் மூலம் 15 முறை ஒன்றிய அரசு அணுகி உள்ளது. ஆனால் அவை அனைத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதற்கு முக்கிய எடுத்துக்காட்டாக காவிரி வழக்கு மற்றும் குஜராத் தொடர்பான வழக்குகள் உள்ளது. அதாவது குடியரசுத் தலைவரை வைத்து ஒன்றிய அரசு பின்வாசல் வழியாக வருகிறது. ஏனெனில் சீராய்வு மனு தாக்கல் செய்தால் அது கண்டிப்பாக தள்ளுபடி செய்யப்படும் என்பது அவர்களுக்கு தெரியும்.
இதுபோன்ற மாறுபட்ட முறையை தான் ஒன்றிய அரசு கையாண்டு வருகிறது. குறிப்பாக இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் மூலம் எவ்வளவு அழுத்தம் ஒன்றிய அரசு கொடுத்தாலும், வழங்கப்பட்ட தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கண்டிப்பாக மாற்றம் செய்யவோ அல்லது நிறுத்தி வைக்கவோ செய்யாது. அறிவுறை வேண்டுமானால் வழங்கும். ஜனாதிபதியின் இந்த 14 கேள்விகளும் ஒன்றிய அரசு வழக்கு விசாரணையின் போது வைத்த வாதங்கள் ஆகும். இதில் இருந்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும். மசோதா மற்றும் ஆளுநர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் கோரிக்கை கண்டிப்பாக உச்ச நீதிமன்றத்தில் நிராகரிக்கப்படும்.
இதில் புதிய செய்தி என்னவென்றால் குடியரசுத் தலைவரின் இந்த பரிந்துரையை காண்பித்து சட்டப்பேரவை மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட வாய்ப்பு உள்ளது. அதாவது குடியரசுத் தலைவர் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்ற காரணத்தை ஆளுநர் தெரிவிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர், ஒன்றிய அரசு மற்றும் ஆளுநர் ஆகியோர் அரசியலமைப்பு மீது நம்பிக்கை இல்லாமல் செயல்படுகின்றனர்.
இவர்களது நடவடிக்கைகள் அனைத்து அதனை தான் வெளிப்படையாக காட்டுகிறது. எனவே மசோதா மற்றும் ஆளுநர் விவகாரத்தில் கடந்த ஏப்ரல் 8ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு கண்டிப்பக நிறுத்தி வைக்க வாய்ப்பு கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
The post குடியரசுத் தலைவர் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் கண்டிப்பாக நிராகரிக்கும்: திமுக எம்பி வில்சன் பேட்டி appeared first on Dinakaran.