
சென்னை,
'படையாண்ட மாவீரா' என்ற படத்தை வ.கவுதமன் இயக்கி, நடித்துள்ளார். பட விழாவில் சினிமா இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் கலந்து கொண்டார். அப்போது சீமான் பேசியதாவது;-
"தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என்று கமல்ஹாசன் பேசியது வெறும் கதை அல்ல, வரலாற்றை தான் எடுத்துச் சொன்னார். கமல்ஹாசன் கருத்தை ஏற்றுக்கொள்வதும், எதிர்ப்பதும் வேறு விஷயம். ஆனால் அவர் நடித்த 'தக் லைப்' படத்தை கர்நாடகாவில் வெளியிட விடமாட்டோம் என்பது நியாயமா? 'கே.ஜி.எப்.' போன்ற கன்னட படங்களை தமிழகத்தில் சுதந்திரமாக ஓட செய்தோமே... அதற்கு கிடைக்கும் பரிசா?
தமிழ் படங்களின் போஸ்டர்களை கர்நாடகாவில் கிழித்து எரித்துள்ளார்கள். அதுபோல தமிழர்கள் இங்கு செய்ய மாட்டார்கள். ஏனெனில் தமிழர்கள் பேரன்பும், பெருந்தன்மையும், உயர் மாண்பும் கொண்ட மக்கள். குடிக்கும் நீரிலும், பொழுதுபோக்கு படங்களிலும் பகையை காட்டலாமா?
தமிழகத்தின் வளம் தமிழர்களுக்கு என்று ஒரு நிலைப்பாட்டில் நாம் எல்லாம் நின்றால், தேசிய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை என்ன ஆகும்? இதெல்லாம் பேசினால் என்னை இனவெறியன் என்கிறார்கள். இருக்கட்டும். அதில் எனக்கு பெருமையும், பேரானந்தமும் உண்டு."
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.