குஜராத் விமான விபத்து; கடைசியாக அடையாளம் காணப்பட்ட பயணியின் உடல் - உறவினர்களிடம் ஒப்படைப்பு

5 hours ago 1

காந்திநகர்,

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12-ந்தேதி லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 டிரீம்லைனர்' விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இந்த கோர விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

மேலும், விபத்திற்குள்ளான விமானம் மெக்நானிநகர் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி விடுதியின் மீது விழுந்து வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தின்போது அந்த இடத்தில் இருந்தவர்கள் சிலர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 260 ஆக அதிகரித்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பாதியாகவோ, அல்லது முழுவதுமாகவோ எரிந்து காணப்பட்டதால், அவர்களை அடையாளம் கண்டு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து உடல்களை அடையாளம் காண்பதற்காக, விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த டி.என்.ஏ. மாதிரிகள் மூலம் உயிரிழந்த நபர்களின் அடையாளம் கண்டறியப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. இதற்கான பணிகளை குஜராத் சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டது.

இதன்படி அனைத்து 259 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், விமானத்தில் பயணம் செய்த 35 வயதான அணில் கிமானி என்ற நபரின் உடல் மட்டும் அடையாளம் காணப்படவில்லை. அவரது உறவினர்களிடம் இருந்து 2 முறை டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அணில் கிமானியின் உடல், அவரது உறவினர்களின் டி.என்.ஏ. மாதிரியின் பொருத்தம் மூலம் அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் அகமதாபாத் விமான விபத்தி உயிரிழந்த அனைவரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article