சென்னை: கீழடி தமிழர் தாய்மடி மதுரையில் மாபெரும் போராட்டம் நடத்திய மாணவரணி பொறுப்பாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் பாஜ அரசைக் கண்டித்து கடந்த 18ம் தேதி திமுக மாணவர் அணி சார்பில், மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை விரகனூரில் திமுக மாணவரணியினர் அன்னைத் தமிழின் பெருமை காத்திடக் களமிறங்கினர். தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வுகள் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கையை ஒன்றிய பாஜ அரசு திட்டமிட்டுப் புறக்கணித்து, திருப்பி அனுப்பியதற்கான எதிர்வினைதான் திமுக மாணவரணியின் மாபெரும் ஆர்ப்பாட்ட அணிவகுப்பு. மாணவரணிச் செயலாளர் ராஜீவ்காந்தியும் மாணவரணியின் துணைச் செயலாளர்களும் ஒருங்கிணைந்து, மாணவர்கள்-இளைஞர்கள்-இளம்பெண்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, ‘கீழடி தமிழர் தாய்மடி‘ என்ற முழக்கத்துடன் போர்ப்பாட்டாக உணர்ச்சிமிகு குரலெழுப்பி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.அரசின் செவிப்பறை கிழியச் செய்திருப்பதை, திமுக தலைவர் என்ற முறையிலும், தமிழ்நாட்டின் முதல்வர் என்ற வகையிலும் பாராட்டி மகிழ்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய அரசு புறக்கணிப்பதை கண்டித்து நடைபெற்ற “கீழடி தமிழர் தாய்மடி” மாபெரும் போராட்டம் வெற்றி பெற்றதையொட்டி திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில் நிர்வாகிகள் மண்ணை த. சோழராஜன், அதலை செந்தில்குமார், பூரண சங்கீதா, ஈரோடு வீரமணி, அமுதரசன், கோகுல் ராமகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் பாண்டி முருகன், அன்பு, ஆதிசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து பேசினர். கீழடி தமிழர் தாய்மடி மதுரையில் மாபெரும் போராட்டம் நடத்திய மாணவரணி பொறுப்பாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அப்போது எம்பி ஆ.ராசா, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.
The post கீழடி தமிழர் தாய்மடி போராட்டம் வெற்றி தி.மு.க மாணவர் அணியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.