கிளாம்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்: போக்குவரத்துக்கழகம் விளக்கம்

3 hours ago 2

சென்னை,

கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம் சாட்டிய நிலையில் கடந்த 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, கும்பகோணம், தூத்துக்குடி, கோவை, சேலம் ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு முன்பதிவு அடிப்படையில் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.கடந்த 4-ந் தேதி (புதன்கிழமை) தினசரி இயக்கக்கூடிய 1,136 பஸ்களுடன் கூடுதலாக 200 பஸ்கள் இயக்கப்பட்டு 73 ஆயிரத்து 480 பயணிகளும், 5-ந் தேதி (வியாழக்கிழமை) கூடுதலாக 622 பஸ்கள் இயக்கப்பட்டு 96 ஆயிரத்து 690 பயணிகளும் மற்றும் 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கூடுதலாக 798 பஸ்கள் இயக்கப்பட்டு 1 லட்சத்து 6 ஆயிரத்து 205 பயணிகளும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 3 நாட்களில் பயணிகளின் தேவைக்கேற்பவும், முன்பதிவு அடிப்படையிலும் போதுமான பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.4-ந் தேதி 7 ஆயிரத்து 31 பயணிகளும், 5-ந் தேதி 8 ஆயிரத்து 496 பயணிகளும், 6-ந் தேதி 9 ஆயிரத்து 364 பயணிகளும் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.இந்த 3 நாட்களில் மொத்தம் 24 ஆயிரத்து 831 முன்பதிவு செய்த பயணிகள் உள்பட 2 லட்சத்து 76 ஆயிரத்து 735 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கு 94 ஆயிரத்து 926 முன்பதிவு இருக்கைகள் உள்ள நிலையில் 26 சதவீத இருக்கைகள் மட்டுமே கடந்த 3 நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.முன்பதிவு வசதி உள்ள அரசு பஸ்களில் அதிகபட்சமாக 9 சதவீதம் மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது. பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்தால், பஸ் நிலையங்களில் தேவையற்ற விவாதங்கள், முண்டியடித்து ஏறுதல் மற்றும் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுவதை அறவே தவிர்க்கப்படும்.மேலும் நள்ளிரவு நேரங்களில் ஒரே நேரத்தில் மிக அதிகளவில் பயணிகள் பஸ் நிலையத்திற்கு பயணம் மேற்கொள்ள வருகை புரிவதால் பயணிகளுக்கு தவிர்க்க முடியாத சிரமம் ஏற்படுகிறது.எனவே, தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கடைசிநேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www/tnstc.in என்ற இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பயணிகள் முன்பதிவு செய்யும் பட்சத்தில் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்களை இயக்கிட வழிவகை செய்யப்படும்.எனவே, பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து எந்தவித சிரமமும் இன்றி பயணம் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article