சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலைய கட்டுமானப்பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அடுத்த மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் திறக்கப்பட்டது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து செல்கிறார்கள். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் அருகில், தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் பாதை இருக்கிறது. ஆனாலும், ரயில் நிலையம் இல்லை. இதனால், இங்கு மின்சார, விரைவு ரயில்களை நிறுத்த முடியாத நிலை இருக்கிறது.