கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புறக்காவல் மையம் - மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

2 months ago 11

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று, புறக்காவல் மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

"கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை, தற்போது மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. இந்த ஆஸ்பத்திரியில் சராசரியாக 2 ஆயிரம் பேர் புறநோயாளிகளாக பயன்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகிறார்கள்.

அதேபோல் ஆஸ்பத்திரி வளாகத்தில் தேசிய முதியோர் நல மருத்துவமனை ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே 2 இடங்களில் முதியோர் நல மருத்துவமனைகள் உள்ளன. அதில் ஒன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திலும், அடுத்து கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகம் ஆகும்.

இங்கு, ஆயிரம் பேர் சராசரியாக புறநோயாளிகளாக மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள். கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை தொடங்கப்பட்ட நாள்முதல் தற்போது வரை 5 லட்சத்து 4 ஆயிரத்து 113 பேர் புறநோயாளிகளாக வருகை புரிந்து மருத்துவ சேவை பெற்றிருக்கிறார்கள்.

உள்நோயாளிகளாக 1 லட்சத்து 69 ஆயிரத்து 888 பேர் வருகை புரிந்து வருகிறார்கள். இதுவரை 6 ஆயிரத்து 90 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. எனவே, இங்கு பல்வேறு வசதிகளுக்காக புறக்காவல் மையம் வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடமிருந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் புறக்காவல் மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது."

இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article