சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் படித்து வரும் மாணவி கடந்த 26ம் தேதி இரவு 7.30 மணி அளவில் வளாகத்தில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த நபர் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இளம்பெண் சத்தமிடவே அந்த நபர் தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்தார். இதையடுத்து, சம்பவ இடத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் ரோஷன் குமார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கைதான ரோஷன்குமார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஐஐடி வளாகத்தில் உள்ள மும்பை சாட் என்ற உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தொடர்ந்து ரோஷன் குமாரை கைது செய்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது. மேலும் தேசிய மகளிர் ஆணையம் சார்பில், வழக்கை நேர்மையாக, குறித்த காலத்திற்குள் விசாரித்து முடிக்கவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடி மருத்துவ மற்றும் உளவியல் உதவி கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
The post கிண்டி ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: நேர்மையாக விசாரிக்க டிஜிபிக்கு மகளிர் தேசிய ஆணையம் கடிதம் appeared first on Dinakaran.