
டெல்லி,
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் நகரின் பைசாரன் மலைப்பகுதியில் நேற்று மதியம் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காஷ்மீரில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேறி வருகின்றனர். இதனால், விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் காணப்படுகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரில் சிக்கியுள்ள சுற்றுலா பயணிகளை அழைத்துவர ஸ்ரீநகரில் இருந்து டெல்லி, மும்பைக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ராம்மோகன் தெரிவித்துள்ளார். அதேவேளை, விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் மத்திய மந்திரி அறிவுறுத்தியுள்ளார்.