காவிரியில் 65 ஆயிரம் கனஅடி நீர்வரத்து; ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு

1 day ago 3

பென்னாகரம்: கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 85 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து 43,892 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்துள்ளது. டெல்டா பாசன நீர்திறப்பு 22,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி, கடந்த வாரத்தில் 25 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. பின்னர், மழை சற்று தணிந்ததால் நீர்திறப்பு 12 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி, கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 45ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று காலை நீர்திறப்பு 60 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு 76,000 கனஅடியாகவும், இரவு 8 மணியளவில் 85 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது. இன்று காலையும் 85 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு பாய்ந்தோடி வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 18 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று இரவு 8 மணியளவில் 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மெயின்அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால், சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பரிசல்கள் ஆங்காங்கே கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பி வைக்கின்றனர். மேலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதேபோல், சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 13,332 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 18,290 கனஅடியாகவும், மாலையில் 37,263 கனஅடியாகவும் அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 43,892 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 20,000 கனஅடியில் இருந்து 22,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை 112.73 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 114 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் நீர்மட்டம் 1.27 அடி உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 84.22 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் காவிரி கரையோரங்களில் முகாமிட்டிருந்த மேட்டூர் அணை மீனவர்கள் தங்களது முகாம்களை மேடான பகுதிக்கு கொண்டு சென்றனர்.

நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அடிபாலாறு, செட்டிப்பட்டி உள்ளிட்ட முகாம்களில் உள்ள மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. நீர்வரத்தும் திறப்பும், இதே நிலையில் இருந்தால் இரண்டு வார காலத்திற்குள் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவை நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post காவிரியில் 65 ஆயிரம் கனஅடி நீர்வரத்து; ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Read Entire Article