காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

5 hours ago 2

தருமபுரி: காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து நீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 16,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் குளிக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

தமிழ்நாடு-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், தமிழ்நாடு எல்லையோர காவிரி ஆற்று பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியில் இருந்து 9,500 கன அடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து தற்போது கபினி அணையில் இருந்து நீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 16,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25,000 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. நீர்வரத்து காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

The post காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை appeared first on Dinakaran.

Read Entire Article